கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையல், ஆன்டிஜன் ரேப்பிட் டெஸ்ட் எனப்படும் ஏஆர்டி பரிசோதனைக் கருவி தொகுப்பை பொதுமக்கள் வாங்கிப் பதுக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
சில்லறை வர்த்தகர்களிடமும் மருந்தகங்களிலும் போதுமான ஏஆர்டி கருவி தொகுப்பு போதுமான கையிருப்பில் இருப்பதாக அமைச்சு டிசம்பர் 11ஆம் தேதி கூறியது.
சுகாதார அமைச்சு தன்னிடம் போதுமான கையிருப்பு உள்ளது என்றும் தேவைப்பட்டால் அமைச்சு கையிருப்பில் இருந்து சில்லறை விற்பனையாளர்களுக்கு விநியோகிக்கும் என்று கூறியது.
ஏஆர்டி கருவி தொகுப்பை உடனடித் தேவைக்கு போதுமான அளவு மட்டுமே வாங்கிக்கொள்ளும்படி அது பொதுமக்களை அறிவுறுத்தியது.
சிங்கப்பூரில் கொவிட்-19 நோய்ச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இது மருத்துவ வளங்களுக்கு நெருக்குதலை ஏற்படுத்தும்.
இதன் தொடர்பில் செய்தியாளர்கள் மருந்தகங்களுக்கு சென்று பார்த்ததில் சில மருந்தகங்களில் ஏஆர்டி பரிசோதனைக் கருவி தொகுப்பு முடிந்துவிட்டது என்று கண்டறியப்பட்டது.
கையிருப்பு தீர்ந்துபோன கடைகள் அனைத்திலும் மறுநாள் சென்று பார்த்தபோது அவை மீண்டும் விற்பனைக்கு வரவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் டிசம்பர் 2ஆம் தேதி முடிந்த வாரத்தில் இவ்வாண்டு ஆக அதிகமான அளவாக 32,035 பேருக்கு கொவிட்-19 நோய் கண்டிருப்பது தெரியவந்துள்ளது.