நோயாளிகளுக்கு போலி கொவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டதாகச் சொல்லப்படும் மருத்துவர் ஒருவர், தமக்கு இடைக்காலத் தடை விதிப்பதற்குப் பதிலாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜிப்சன் குவாவுக்கு, 35, தற்போது இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது, அவர்களுக்கு மருந்துகளை வழங்கக் கூடாது, தேசிய பதிவகத்தில் கொவிட்-19 விவகாரங்களைப் பதிவு செய்யக் கூடாது, எந்தவிதமான கொவிட்-19 பரிசோதனைகளை நடத்தக் கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்று அவர் உத்தேச யோசனைகளைத் தெரிவித்துள்ளார்.
ஆனால் சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின்(எஸ்எம்சி) இடைக்கால உத்தரவுக் குழு(ஐஓசி) அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டது. அவருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்று நவம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட மறுஆய்வில் அது குறிப்பிட்டது.
முன்னதாக 2022 மார்ச் மாதத்தில் குவாவுக்கு 18 மாதங்கள் இடைக்காலத் தடை விதித்திருந்தது ஐஒசி. இதுதான் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காலமாகும்.
பின்னர் எஸ்எம்சி, உயர்நீதிமன்றத்திலிருந்து முறையாக அனுமதி பெற்று அவருக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை மேலும் 12 மாதங்களுக்கு நீட்டித்தது. இதனால் மொத்தம் 30 மாதங்கள் அவர் இடைக்காலத் தடையின்கீழ் வந்துள்ளார்.
இரண்டாவது இடைக்காலத் தடை 2024 செப்டம்பர் 22ஆம் தேதி வரை அல்லது ஒழுங்கு நடவடிக்கையின் முடிவு வரை அமலில் இருக்கும்.
மருத்துவருக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை ஒரு தண்டனை அல்ல. ஆனால் மருத்துவருக்கு எதிரான வழக்கு தீர்க்கப்படும் வரை பொதுமக்களை பாதுகாப்பதற்காக விதிக்கப்படுகிறது.
குவா, 15 நோயாளிகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி போட்டதாக சுகாதார அமைச்சிடம் தவறான தகவலை அளித்ததாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் நோயாளிகளுக்கு அவர் ‘சலைன் சொல்யுஷன்’ செலுத்தியதாகக் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் டிசம்பர் 2021 கடைசி இரண்டு வாரங்களில், நிகழ்ச்சிகளுக்கு முந்திய கொவிட்-19 பரிசோதனையில் ஏறக்குறைய 430 சோதனை முடிவுகளை அவர் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. அவை விதிமுறைகளுக்கு ஏற்ப நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.
மொத்தம் 17 குற்றச்சாட்டுகளை குவா எதிர்நோக்குகிறார். தற்போது $30,000 பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளி என்பது நிரூபணமானால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.