ஷங்ரிலா ராசா செந்தோசா ஹோட்டலில் வேலை பயிற்சிக் காலத்தில் குமாரி இங் ஜிங் லிங் (படம்) அலுவலக முகப்பு பணியாளர், ஹோட்டல் அறை துப்புரவாளர் எனப் பல்வேறு பிரிவுகளில் வேலை பார்த்தார்.
இந்தப் பயிற்சித் திட்டத்தின் பயனாக அவர் ஹோட்டல் துறை பற்றி நன்கு புரிந்துகொண்டார். இதைத் தொடர்ந்து 20 வயதான குமாரி இங் ஹோட்டல், தங்குமிட துறையில் ஊழியரணித் திறன்கள் சான்றிதழ் திட்டத்தின்கீழ் பட்டயம் பெறவல்ல புதிய பயிற்சித் திட்டத்தில் சேர முடிவு செய்தார்.
"பயிற்சித் திட்டத்தின் வாயிலாக எனக்கு உண்மையிலேயே ஹோட்டல் துறையில் ஆர்வம் மிகுதியாக இருப்பதை உணர்ந்தேன். அதனால் அதுபற்றி மேலும்
தெரிந்துகொள்ள ஆசையாக உள்ளது," என்றார் உள்ளூர் மற்றும் அனைத்துலக வருகையாளர்களுடன் பழகும் வாய்ப்புப் பெற்றுள்ள குமாரி இங்.
இந்தப் பயிற்சித் திட்டம் 'ஹோம் அப்ரென்டிஷிப் டிப்ளோமா புரோகிராம்' எனப்படும் ஊழியரணித் திறனாளர்கள் சான்றிதழ் திட்டத்தின்கீழ் நடத்தப்படும் மூன்று திட்டங்களில் முதலாவ தாகும். இந்தப் பயிற்சித் திட்டங்கள் சிங்கப்பூர் ஹோட்டல் சங்க பயிற்சிப் பிரிவான ஷாடெக் விருந்தோம்பல் கல்லூரியால் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது.
இது தவிர உணவு சேவை (சமையல் கலை) பிரிவிலும் பயணத்துறை (நிகழ்ச்சி ஏற்பாடு, நடத்துதல்) பிரிவிலும் நடத்தப்பட உள்ள பட்டயப் பயிற்சித் திட்டம் இனி படிப்படியாக இந்த ஊழியரணித் திறனாளர்கள் சான்றிதழ் திட்டத்தின்கீழ் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதன் தொடர்பில் ஜூரோங் ஈஸ்ட் ஷாடெக்கில் உள்ள தேவன் நாயர் வேலைத் திறன், வேலைத் தகுதிக் கழகத்தில் தேசிய தொழிற்சங்க காங்கிரசும் 12 ஹோட்டல்களும் புரிந்துணர்வுக் குறிப்பு ஒன்றில் கையெழுத்திட்டன.
இதன்மூலம் இந்த ஹோட்டல்கள் தொழிற்துறை சார்ந்த பிரத்தியேக பயிற்சித் திட்டத்தை வழங்குவதுடன் பயிற்சிக்கு வருவோரை ஊழியரணிக்கு தயார் செய்யும் வகையில் பயிற்சியளிக்கும்.
குமாரி இங் இந்த 18 மாத கால பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கும் 20 பேரில் ஒருவர்.
இந்தப் பயிற்சிக் காலம் அக்டோபர் மாதம் தொடங்கும்.