வெளிநாட்டு ஊழியர்கள், வெளிநாட்டு இல்லப் பணியாளர்கள் ஆகியோரின் 18 சமையல் குறிப்புகள் ஒரே நூலில் வெளியிடப்பட்டுள்ளன.
டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை, ‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் மாலை 6 மணியளவில் மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன், ‘அவர் மைக்ரண்ட்ஸ் கிச்சன்’ எனும் இந்நூலை வெளியிட்டார்.
அனைத்துலக குடியேறிகள் தினத்தை (டிசம்பர் 18) முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிவழி, மக்களிடத்தில் வெளிநாட்டு ஊழியர்கள், வீட்டுப் பணியாளர்களின் தியாகங்களைப் பற்றி புரிந்துணர்வு ஏற்படுத்த விரும்புவதாகக் கூறினார் அமைச்சர்.
“நாம் சிங்கப்பூரை விட்டு சில நாள்கள் பிரிந்திருந்தால்கூட இங்குள்ள உணவுக்காக ஏங்குகிறோம். வெளிநாட்டு ஊழியர்களோ நெடுங்காலத்திற்குத் தங்கள் தாய்நாட்டை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள்,” என்றார் டாக்டர் கோ.
இந்நூலுக்கு அமைச்சர் கோ முன்னுரையும் வழங்கியுள்ளார்.
தாய்நாட்டைப் பிரிந்து வாழ்வோர் தங்களின் உணர்வுகளைச் சமாளிக்க வெளிநாட்டு ஊழியர்கள், வீட்டுப் பணியாளர்கள் சமைக்கும் உணவு வகைகளும் அவர்களது வாழ்க்கைக் கதைகளும் இந்நூலில் இடம்பெறுகின்றன.
அவர்களில் ஒருவர்தான் திரு மோகன் ஷகில், 30. கடலூரைச் சேர்ந்த இவர், மீனவக் குடும்பத்தில் பிறந்தவர். 18 வயதில் சிங்கப்பூருக்குக் கட்டுமானத் துறை ஊழியராகக் குடியேறினார். தன் தந்தையிடமிருந்து கற்ற இறால் மசாலா சமையல் குறிப்பை இந்நூலில் விவரிக்கிறார்.
நூலில் இடம்பெறும் மற்றொருவர் மின் தொழில்நுட்பராகப் பணியாற்றும் திரு தாயுமானவன் நாகரத்தினம், 33. அவர் தம்முடைய பாட்டி, தாத்தாவின் நண்டு ரசத்தின் சமையல் குறிப்பைப் பகிர்ந்துகொண்டார்.
“மழைக்காலத்தில் நண்டு சுலபமாகக் கிடைக்கும்; சளிக்காய்ச்சலைப் போக்க வீட்டில் இதைச் சமைப்பார்கள்,” என்றார் அவர். நூல் வெளியீட்டில் டாக்டர் கோவும் அவரது நண்டு ரசத்தைச் சுவைத்துப் பார்த்தார்.
இந்நூல் விற்பனைக்கானது அல்ல. அறநிறுவனங்கள், ஊழியர் தங்குமிடங்கள், அடித்தள அமைப்புகள், பள்ளிகள், சமூக நூலகங்கள் முதலான சமூகப் பங்காளிகளுக்கு விநியோகப்படும்.
நூலை go.gov.sg/ourmigrantskitchen-english இணையத்தளத்தின் வாயிலாகப் பதிவிறக்கம் செய்யலாம். டிசம்பர் 18ஆம் தேதி முதல் பொதுமக்கள், சமூக நூலகங்களிலிருந்தும் இரவல் பெறலாம்.
இம்முயற்சியின் மற்றோர் அங்கமாக, டிசம்பர் 4 முதல் 10ஆம் தேதி வரை ‘அவர் தெம்பனிஸ் ஹப்’பில் பல்லூடகக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது மனிதவள அமைச்சின் உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாட்டுக் குழு. பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்.
இக்கண்காட்சியில் சமையல் குறிப்பு நூலிலிருந்து சில கதைகளோடு, வெளிநாட்டு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்றுள்ள உணவு, பண்பாட்டுப் பரிமாற்ற நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
பொதுமக்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பாராட்டுக் குறிப்புகளை எழுதி ஒட்டுவதற்கு ஒரு சுவரும் அங்கு இருக்கிறது.
டிசம்பர் 17ஆம் தேதி ‘லிட்டில் இந்தியா’விலும் பொழுதுபோக்கு நிலையங்களிலும் வெளிநாட்டு ஊழியர்களுக்காகக் கொண்டாட்டங்கள் நடைபெறும். மேல்விவரங்களுக்கு imdsingapore.com என்ற இணைப்பை நாடலாம்.