குறைந்த வருமானக் குடும்பத்தினர் தங்களது வாழ்க்கையை முன்னேற்றும் வகையில் பணியாற்றினால் அவர்களுக்கு நிதி ஊக்குவிப்பும் இதர ஆதரவுகளும் அளிக்கப்பட உள்ளன.
குறைந்த வருமானம் ஈட்டுவோரை ஆதரிக்கும் தேசிய நடவடிக்கையின் ஒரு பகுதியாக அது இடம்பெற உள்ளது.
அதிக மானியங்களுடன் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் வாடகை வீடுகளில் குழந்தைகளுடன் வசிக்கும் குடும்பங்கள், உதவி பெறுவதற்காக வகுக்கப்பட்டு உள்ள சில குறிப்பிட்ட தகுதிகளை எட்டினால் அந்தக் குடும்பங்களுக்கு ஒட்டுமொத்த ஊக்குவிப்பாக $30,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும், சொந்த வீடு வாங்குவதற்கான சேமிப்புக்காக மத்திய சேம நிதியில் அவர்கள் தொகையைப் போடலாம்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி திங்கட்கிழமை காம்லிங்க் பிளஸ் என்னும் புதிய திட்டத்தை அறிவித்தார். அதில் இந்த விவரங்கள் அடங்கி உள்ளன.
மொத்தம் நான்கு விதமான ஆதரவுத் தொகுப்புகள் அந்தத் திட்டத்தில் இடம்பெற்று உள்ளன. பாலர் பள்ளிக் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் வீட்டு உடைமை போன்றவற்றுக்கான ஆதரவுகள் அவை.
2024ஆம் ஆண்டு இரண்டாம் பாதியில் இருந்து கட்டம் கட்டமாக அறிமுகம் காணவிருக்கும் திட்டத்தின் ஆதரவுகளைப் பெற கம்யூனிட்டி லிங்க் திட்டத்திற்கு ஏறக்குறைய 14,000 குடும்பங்கள் தகுதி பெறுகின்றன.
மூன்று வயதிலிருந்து தங்களது குழந்தைகளைப் பாலர் பள்ளிக்கு அனுப்ப குடும்பங்களை ஊக்குவிப்பது ஆதரவுத் திட்டத்தின் நோக்கம்.
மேலும், மசே நிதி பங்களிப்பு வழங்கக்கூடிய நிரந்தரமான வேலையைத் தேடிப் பெறவும் சொந்த வீடு வாங்குவதற்கான சேமிப்புகளை மேற்கொள்ளவும் திட்டம் கைகொடுக்கும்.
உதாரணமாக, குறைந்தபட்சம் $1,400 மாதச் சம்பளத்துடன், மசே நிதி பங்களிப்பு வழங்கக்கூடிய வேலையைத் தேடிப் பெறுவோருக்கு ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ரொக்கம் மற்றும் மசே நிதி நிரப்புத் தொகையாக $450 முதல் $550 வரை கிடைக்கும்.
குறைந்த வருமானக் குடும்பத்தினரின் கடன்களை அடைப்பதில் ஆதரவு அளிக்கும் உதவித் தொகுப்பும் இத்திட்டத்தில் உள்ளது.
வீடமைப்பு மற்றும் பயனீட்டுக் கடன்களை அடைக்க வெள்ளிக்கு வெள்ளி என்னும் அடிப்படையில் $5,000 வரையிலான கடன்களை அடைக்க உதவி கிடைக்கும்.