வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வாடகை வீடுகளில், பிள்ளைகளுடன் வசிக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவும் வகையில் கூடுதல் ஆதரவு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி, நவம்பர் 20ஆம் தேதி அவற்றை அறிவித்தார்.
வேலைவாய்ப்பு, பாலர் கல்வி, சொந்த வீடு வாங்குதல், கடனை அடைத்தல் என நான்கு பிரிவுகளில் வழங்கப்படவிருக்கும் நிதி உதவியும், கூடுதல் ஆதரவு நடவடிக்கைகளில் அடங்கும்.
வீவக வாடகை வீடுகளில் பிள்ளைகளுடன் வசிக்கும் குறைந்த வருமானக் குடும்பத்தினரின் வாழ்க்கையை மேம்படுத்துவது இத்தகைய நடவடிக்கைகளின் நோக்கம்.
காம்லிங்க் திட்டத்தில் பதிந்துகொண்டுள்ள இத்தகைய குடும்பத்தினர் மத்திய சேம நிதிக்கு தாங்களாக முன்வந்து பங்களித்தால், அவர்களின் மசே நிதி சேமிப்புக் கணக்கில் கூடுதல் தொகை நிரப்பப்படும்.
எடுத்துக்காட்டாக, இத்தகைய குடும்பத்தினர் மசே நிதிக் கணக்கில் நிரப்பும் ஒவ்வொரு வெள்ளிக்கும் ஈடாக, புதிய ‘காம்லிங்க் பிளஸ்’ திட்டத்தின்கீழ் இரண்டு வெள்ளியை அரசாங்கம் அவர்களின் கணக்கில் செலுத்தும்.
குறைந்த வருமானக் குடும்பத்தினர் சொந்த வீடு வாங்குவதற்கான சேமிப்பை விரைவில் உயர்த்த இது வழிவகுக்கும். அவர்களின் கனவை நிறைவேற்றிக்கொள்ள மேம்பட்ட வாய்ப்பையும் அது வழங்கும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு கூறியது.
இந்தத் திட்டத்தால் பயனடையக்கூடியவர்களில் திருவாட்டி பூர்ணாவதி குடும்பத்தினரும் அடங்குவர்.
37 வயது இந்தோனீசியரான அவர், பத்து ஆண்டுகளுக்குமுன் சிங்கப்பூர் வந்து இப்போது நிரந்தரவாசத் தகுதி பெற்றுள்ளார்.
இவரது கணவர் குவா சீ ஹியன், 59, அமலாக்க அதிகாரியாக செர்ட்டிஸ் சிஸ்கோ நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மாத வருவாய் $1,450.
இந்தத் தம்பதிக்கு 4 முதல் 6 வயதாகும் மூன்று பெண் குழந்தைகள் உண்டு.
ஒற்றை வருமானத்தில் காலந்தள்ளுவது சிரமம் என்பதால் தானும் வேலை தேடுவதாகக் கூறினார் திருவாட்டி பூர்ணாவதி.
மசே நிதிச் சந்தா செலுத்தும் இத்தகைய குடும்பத்தினர்க்கு காம்லிங்க் பிளஸ் திட்டத்தின்கீழ் $450 முதல் $550 வரையிலான நிதி ஆதரவும் வழங்கப்படும். ஒரு வீட்டில் இருவர் இவ்வாறு வேலை பார்த்தால் கூடுதல் நிதி ஆதரவு கிடைக்கும்.
காம்லிங்க் பிளஸ் திட்டத்தின்கீழ், அதிகபட்சம் $5,000 கடனை அடைக்க ஆதரவு தரும் சிறப்புத் திட்டமும் இத்தகையோர்க்கு உதவுகிறது. காம்கேர் உதவி பெறாத குடும்பங்களுக்கு, ஒருமுறை மட்டும் இத்தகைய உதவி வழங்கப்படும்.
குறைந்த வருமானக் குடும்பங்களைப் பொறுத்தவரை, சிறிய அளவிலான கடன்கூட, பொருளியல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்று அமைச்சு கூறியது.
சொந்த வீடு வாங்குதல் உள்ளிட்ட வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவும் நடவடிக்கைகளுக்கு இத்திட்டம் கைகொடுக்கும் என்று திருவாட்டி பூர்ணாவதி நம்பிக்கை தெரிவித்தார்.