சுகாதாரப் பராமரிப்பில் மருந்தகங்கள் மற்றும் தனியார் மருத்துவர்களின் பங்கு, நோயாளிகள் சிகிச்சைக்காக முதலில் செல்லும் இடம் என்பதையும் தாண்டி அவர்கள் தொடர்ந்து ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும் ஒன்றாக உருமாறியுள்ளது.
தற்போது அடிப்படை மருத்துவப் பராமரிப்பும் நோய்த் தடுப்பு பராமரிப்பும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து உள்ளன.
இதனால், அடிப்படைப் பராமரிப்பு, அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பரந்து விரிந்த ஒன்றாகியுள்ளது என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறினார்.
நோய்களைக் குணப்படுத்துவதோடு உடல்நலத்தை மேம்படுத்துவது மருத்துவர்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியமன்று.
சமூகத்தில் அனைவரும் ஒன்றிணைந்து நோயாளிகளுக்கு ஆதரவும் ஊக்கமும் அளிக்கவேண்டும். அதுவே மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர உதவும் என்றார் அவர்.
பலதுறை மருந்தகங்கள் சமூகத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டும். விரைவில் பல நடவடிக்கைகள் கூட்டாக மேற்கொள்ளப்படவுள்ளன.
புகைபிடிப்பதை தவிர்க்கும் இயக்கம், ஆரோக்கிய உணவுமுறை, உடற்பயிற்சி, மூத்த குடிமக்கள் இல்லங்களை விட்டு வெளியேவந்து சமூகத்துடன் ஒன்றுகூட உதவும் நிகழ்ச்சிகள் போன்றவை அவற்றில் சில.