சிங்கப்பூரில் பிறந்த ‘லெ லெ’ பாண்டா கரடிக்குட்டியை வியாழக்கிழமை (டிசம்பர் 14) முதல் இங்கு மக்கள் பார்க்க முடியாது. ரிவர் வொண்டர்ஸில் அதனைக் காட்சிக்கு வைப்பது புதன்கிழமையுடன் முடிவடைந்தது.
கிட்டத்தட்ட நான்கரை வாரத்துக்கு அது தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், சீனாவுக்கு 2024 ஜனவரி 16ஆம் தேதி விமானம் மூலம் அது நான்கரை மணி நேர பயணம் மேற்கொண்டு அனுப்பிவைக்கப்படும்.
லெ லெவுக்காக தனிப்பயனாக்கப்பட்ட கூடை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் அதற்குத் தேவையான 50 கிலோ எடைகொண்ட மூங்கில், மூங்கில் தண்டுகள், பழங்கள், தண்ணீர் ஆகியவை இருக்கும்.
அதன் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மண்டாய் வனவிலங்கு குழுமத்தைச் சேர்ந்த காப்பாளரும் கால்நடை மருத்துவரும் அதனுடன் சீனாவுக்கு பயணம் மேற்கொள்வார்கள்.
மண்டாய் வனவிலங்கு குழுமத்தைச் சேர்ந்த விலங்கு காப்பாளர் நோர்ஃபைசா அப்துல் அஜீஸ், “லெ லெவை பார்த்துக்கொண்டது எனக்கு மிகப் பெரிய கனவு. நேரம் இவ்வளவு சீக்கிரமாக சென்றுவிடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
“சிறிய 200 கிராம் குட்டியிலிருந்த லெ லெ, தற்போது 73 கிலோகிராம் எடையில் உள்ளது. லெ லெ மிகவும் திறமைசாலி,” என்று உணர்ச்சிபொங்கக் கூறினார்.
ரிவர் வொண்டர்ஸில் அதன் பெற்றோர்களான காய் காய் மற்றும் ஜியா ஜியாவுடன் கூண்டில் வைக்கப்பட்டு இருந்ததை ஆகக் கடைசியாகக் காண ஏராளமானோர் புதன்கிழமை வந்தனர்.
காலை 10 மணிக்கு அந்தக் காட்சிக்கூடம் திறப்பதற்கு முன்னரே 8 மணிக்கெல்லாம் வந்து ஆவலுடன் காத்திருந்ததாக டை பூன் பிங் என்பவர் தெரிவித்தார்.
அவரைப்போலவே மேலும் பலர் 8 மணியளவில் வரிசை பிடிக்கத் தொடங்கினர்.
2021 ஆகஸ்ட் மாதம் லெ லெ பிறந்தது. 2022 ஜனவரியில் முதன்முதலில் லெலெ குட்டியைப் பார்க்கத் தொடங்கிய திரு டை, கிட்டத்தட்ட ஒவ்வொரு வாரமும் அதனைச் சென்று பார்த்ததாகச் சொன்னார்.
லெ லெ இங்கிருந்து செல்வது ஒரு குடும்ப உறுப்பினரைப் பிரிவதைப் போன்றது என்றார் மற்றொரு வருகையாளரான திருவாட்டி சூ ஜியா லெ.
லெ லெ அதன் பூர்வீக நாடான சீனாவுக்குச் சென்றாலும் அங்கும் போய் அதனைப் பார்க்கப் போவதாகக் கூறினார் அவர்.
சீனாவுக்குப் பயணம் செய்வதற்கு ஏதுவாக, லெ லெயின் உடல்நிலையைப் பராமரிக்க அது தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக மண்டாய் வனவிலங்குக் குழுமம் கூறியது.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் திரு கஜேந்திரன் சொக்கையன் லெ லெவுக்கான பயண ஏற்பாடுகள் குறித்து சில தகவல்களைச் சொன்னார்.
“மற்ற மிருகங்கள்போல நாங்கள் லெ லெவுக்குக் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான ஏற்பாடுகளைத்தான் செய்துள்ளோம். அது சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் போது, அறையின் அழுத்தத்தில் எவ்வித மாற்றங்கள் இருக்காது. ஆனால், தட்பவெப்ப நிலை 12 டிகிரி செல்ஸியசிலிருந்து 15 டிகிரி செல்சியசுக்குள் இருக்கும்,” என்று அவர் பகிர்ந்துகொண்டார்.
புதன்கிழமை காலை ரிவர் வொண்டர்ஸில் பாண்டா கரடிக்குட்டிக்கு பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
9.40 மணியளவில் லெ லெ அதன் குகையிலிருந்து வெளியே வந்தது. கண்காட்சி இடத்துக்கு மெதுவாக அது அடியெடுத்து வைக்க, ஊடகத்தினர் ஆரவாரத்துடன் புகைப்படங்கள் எடுக்க தொடங்கினர்.
கண்காட்சியின் மையத்துக்கு வந்தபோது, அந்த இடத்தைச் சுற்றிலும் அழகான அலகாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தனக்கு வசதியான இடத்தில் அமர்ந்துகொண்டு மூங்கில் தண்டுகளை சுவைக்கத் தொடங்கிய லெ லெ, அதன் பக்கத்தில் இருந்த அட்டைப்பெட்டிகளை ஆர்வத்துடன் திறந்து பார்த்து அதனுள் இருந்த மூங்கில் தண்டுகளை ருசிக்க ஆரம்பித்தது.
பள்ளி விடுமுறை காலம் என்பதால், லெ லெவைக் காண சிறுவர்களின் உற்சாகம் குறையவில்லை.