புத்தாண்டில் பாலர் பள்ளியிலிருந்து தொடக்கப்பள்ளிக்குச் சென்றிருக்கும் மாணவர்கள் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.
அவற்றைச் சமாளிக்க உதவ, பெற்றோரும் ஆசிரியர்களும் கையாளக்கூடிய உத்திகளை விவரித்தார் ஜூலியா கேபிரியல் கல்வி நிலையத்தின் நாடகம், தொடர்பு, எழுத்தறிவு செயல்திட்டத் தலைவர் மாலா சுந்தரம்.
புத்தாண்டில் பாலர் பள்ளியிலிருந்து தொடக்கப்பள்ளிக்குச் சென்றிருக்கும் மாணவர்கள் பல மாற்றங்களை எதிர்கொள்கின்றனர்.
அவற்றைச் சமாளிக்க உதவ, பெற்றோரும் ஆசிரியர்களும் கையாளக்கூடிய உத்திகளை விவரித்தார் ஜூலியா கேபிரியல் கல்வி நிலையத்தின் நாடகம், தொடர்பு, எழுத்தறிவு செயல்திட்டத் தலைவர் மாலா சுந்தரம்.
இவர் 20 ஆண்டுகளாக ஜூலியா கேபிரியல் நிலையத்தில் பணிபுரிந்துள்ளார். அதற்கு முன்பும் பல்லாண்டுகாலம் கல்வித்துறையில் இருந்தவர். வாரந்தோறும் 3 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஜூலியா கேபிரியல் நடத்தும் பேச்சு, நாடகம் மற்றும் வாசித்தல், எழுத்து வகுப்புகளில் முக்கியப் பங்கும் வகித்துவருகிறார்.
இவரது திட்டங்களை வரும் மார்ச், ஜூலை மாதங்களில் ஜூலியா கேபிரியல் திறக்கவிருக்கும் இரு ‘திரைவ் (Thrive)‘ பள்ளிநேரத்திற்குப் பிந்திய பராமரிப்பு மையங்களிலும் காணலாம்.
மாணவர்கள் சந்திக்கக்கூடிய சவால்கள்
“பாலர் பள்ளி சிறார்கள் தொடக்கப்பள்ளிக்குச் செல்லும்போது எதிர்கொள்ளும் பெருஞ்சவால்களில் ஒன்று பெரிய வகுப்புக்கு மாறுவதே. ஆசிரியரின் கவனத்தை ஈர்ப்பது மாணவர்களுக்குத் தொடக்கத்தில் கடினமாக இருக்கும்.
“மேலும், தம் சக மாணவர்களுடன் பெரிய குழு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியிருக்கும். புதிய நண்பர்களை உருவாக்கவேண்டும். அத்தனைப் புதிய முகங்களையும் பார்க்கும்போது சற்று பதற்றமும் ஏற்படலாம்,” என்றார் திருவாட்டி மாலா.
மாணவர்கள் தாமாகச் செயல்படவேண்டிய கட்டாயமும் ஒரு சவால் என்றார் அவர்.
“அவர்கள் தங்கள் புத்தகப்பைகளைத் தயார்ப்படுத்தவேண்டும்; உடைமைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டும்; சீருடை அணியவேண்டும்; வெவ்வேறு வகுப்புகளுக்குச் செல்லவேண்டும்,” என்றார் திருவாட்டி மாலா.
விரைவாக கற்கவேண்டியதையும் ஒரு சவாலாக அவர் சுட்டினார்.
சவால்களைச் சமாளிக்க உத்திகள்
ஆசிரியர்களும் பெற்றோரும் மாணவர்களுக்கு வகுப்பில் உதவி கேட்பதற்கான வழிமுறைகளை சொல்லித் தரவேண்டும் என்றார் திருவாட்டி மாலா.
“மேலும், தங்களது குழந்தைகளை அன்றாடம் ஒரு புதிய தோழரை உருவாக்கவும் அவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் பெற்றோர் ஊக்குவிக்கலாம். நண்பர்கள் பற்றிய கலந்துரையாடல்களை பெற்றோர் தொடங்கலாம்.
“பள்ளியில் மூத்த மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்குத் துணை கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையையும் அளிக்கவேண்டும்,” என்றார் திருவாட்டி மாலா.
இவற்றுக்கு முதற்படியாக, சிறுவர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டிருக்க வேண்டும். அதற்கு, வாசிப்பு, பேச்சு, நாடகம், எழுத்துப் பயிற்சிகள் பெரிதும் கைகொடுக்கும் என்கிறார் அவர்.
“மேலும், பெற்றோரும் ஆசிரியர்களும் மாணவர்களின் வாசிப்புத் திறனில் அதிக கவனம் செலுத்தவேண்டும். தொடக்கப்பள்ளியில் பல அம்சங்களை உள்வாங்க வாசித்தல் முக்கியம்,” என்றார் திருவாட்டி மாலா.
அடிக்கடி நூலகங்களுக்கு அழைத்துச் செல்வது, புனைவு, அல்புனைவுகள் என விதவித நூல்களையும் பத்திரிகைகளையும் வீட்டில் கைக்கெட்டிய தொலைவில் வைப்பது, ‘நீ ஒரு பக்கம் படி, நான் ஒரு பக்கம் படிக்கிறேன்’ என இணைந்து படிப்பது போன்ற வழிகளில் வாசிப்புமீதான நாட்டத்தைப் பிள்ளைகளிடத்தில் பெற்றோர் வளர்க்கலாம் என்றும் அவர் கூறினார்.