கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகளில் 2025ஆம் ஆண்டில் சேரவிருக்கும் பாலர்பள்ளி ஒன்றாம் நிலை மாணவர்களுக்கான பதிவு பிப்ரவரி 16ஆம் தேதி தொடங்கும் என்று கல்வி அமைச்சு கூறியது.
அது பிப்ரவரி 20ஆம் தேதிவரை தொடரும்.
இரண்டு புதிய பள்ளிகள் உட்பட ஏறக்குறைய 55 கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகள் எதிர்வரும் கல்வி அமைச்சின் பாலர்பள்ளி பதிவு நடவடிக்கையில் கலந்துகொள்ளும்.
இலாயஸ் பார்க்கிலும் ஹவ்காங்கிலும் அமைந்துள்ள அந்த இரண்டு புதிய கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகள் 2025ஆம் ஆண்டில் திறக்கப்படும்.
பிளாங்கா ரைசிலும் கிராஞ்சியிலும் உள்ள கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகள் தொடர்ந்து இவ்வாண்டு செயல்படும். ஆனால் 2025இல் அவை மூடப்படும் அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படும் என்பதால் பாலர் பள்ளி ஒன்றாம் நிலைக்கான புதிய மாணவர்கள் எடுத்துக்கொள்ளப்பட மாட்டார்கள்.
2020ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதிக்கும், 2021ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கும் இடையே சிங்கப்பூரர்களுக்கும், நிரந்தரவாசிகளுக்கும் பிறந்த பிள்ளைகளுக்குப் பதிவுசெய்யலாம்.
இதற்கிடையே, அனைத்து கல்வி அமைச்சின் பாலர்பள்ளிகளும் சீனம், மலாய், தமிழ் என மூன்று தாய்மொழிப் பாடங்களை வழங்குகின்றன. தொடக்கக் காலத்தில் இருமொழி ஆற்றலை ஊக்குவிப்பதும், மொழிக் கற்றலுக்கு வலுவான அடித்தளத்தை அமைப்பதுமே நோக்கம்.
பெற்றோர் கல்வி அமைச்சின் பாலர்பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்கு அதன் இணையத்தளத்தில் பிப்ரவரி 16, காலை 9 மணியிலிருந்து பிப்ரவரி 20, பிற்பகல் 4 மணிவரை பதிவுசெய்யலாம்.
கல்வி அமைச்சின் இணையத்தள முகவரி: www.moe.gov.sg/mk