பார்வையற்றோர் படிப்பதற்கு உதவியாக பிரெய்ல் எழுத்துமுறையை உருவாக்கியவர் லூயிஸ் பிரெய்ல்.
1809ஆம் ஆண்டு பிரான்சில் பிறந்த அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது பிறந்தநாளான ஜனவரி 4ஆம் தேதி, ஒவ்வோர் ஆண்டும் உலக பிரெய்ல் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
விபத்து அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக அவர் 5 வயதில் இரு கண்களிலும் பார்வையை இழந்தார். இருப்பினும் மனந்தளராமல் முயன்று தம் 15ஆம் வயதில் அவர் வடிவமைத்த பிரெய்ல் எழுத்துமுறை இன்று உலகெங்கும் பார்வையற்றோர்க்கு பேருதவியாக விளங்குகிறது.
படிப்பதற்கும் எழுதுவதற்கும் கற்றுத்தரும் பிரெய்ல் முறையின்கீழ் ஆறு புள்ளிகளைக் கொண்டு எண்களையும் எழுத்துகளையும் எழுதலாம். இசைக் குறிப்புகள், கணிதக் குறிப்புகள், அறிவியல் குறியீடுகள் ஆகியவற்றையும் இந்த முறையில் எழுத இயலும்.
2018ஆம் ஆண்டு ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபை, ஜனவரி 4ஆம் தேதியை உலக பிரெய்ல் தினமாக அறிவித்தது. பார்வையற்றோர் சுதந்திரமாகச் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த நாள் உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.
பார்வையற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்துவதும் இந்த நாளின் இலக்கு.