சண்டிகர்: அமில வீச்சால் பாதிக்கப்பட்ட கஃபி என்ற 15 வயது மாணவி (படம்), தன் பார்வையை இழந்த நிலையிலும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வில் 95.2% மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளார்.
சண்டிகர் நகரைச் சேர்ந்த வரான கஃபி, தனது மூன்று வயதில் அமில வீச்சு தாக்குதலுக்கு ஆளானார். இதனால், கஃபியின் முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு, பார்வையும் பறிபோனது.
வீட்டில் வறுமை நிலை. தந்தை ‘பியூன்’ வேலை பார்த்துவந்தார். எனினும், வைராக்கியத்தைக் கைவிடாத கஃபி, இன்று லட்சக்கணக்கான சிறுமிகள், மாணவிகள், பெண்களுக்கு ஒரு வழிகாட்டியாக விளங்குகிறார்.
தனது தேர்ச்சி குறித்து கஃபி கூறுகையில், “பெற்றோரும் ஆசிரியர்களும் நிறைய ஊக்கம் அளித்தனர். ஐஏஎஸ் அதிகாரியாகி நாட்டுக்குச் சேவையாற்ற விரும்புகிறேன்.
“வறுமையும் சவாலும் என் மனக் கண்முன் நின்றபோதும் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் படிப்பின்மீது மட்டுமே கவனத்தைச் செலுத்தியதால் இந்தச் சாதனையைப் புரிய முடிந்தது,” என்கிறார் கஃபி நம்பிக்கையுடன்.
இவர் தனது எட்டு வயது முதலே ஹிசார், சண்டிகரில் உள்ள பார்வையற்றோர் பள்ளி களில் பயின்று வந்துள்ளார்.