மும்பை: தென்மேற்கு அரபிக் கடலில் ‘தேஜ்’ புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, வெள்ளிக்கிழமை காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும் வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து புதன்கிழமை அன்று தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது ஆய்வு நிலையம்.
இந்த புயல் சின்னத்திற்கு இந்திய வானிலை ஆய்வு நிலையம் ‘தேஜ்’ என்ற பெயர் சூட்டியுள்ளது.
‘தேஜ்’ புயலினால் முதலில் குஜராத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
தற்போது அது ஓமன் நோக்கி நகர்வதால் குஜராத்துக்கு பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்க்ப்பட்டது.
இதனால் குஜராத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் கூறியது.