அக்டோபர் மாதம் 8ஆம் தேதிக்கும் 20ஆம் தேதிக்கும் இடையில் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் நடத்திய அமலாக்க நடவடிக்கையில் 134 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 14 வயதுச் சிறார் இருவரும் அடங்குவர்.
அவர்களிடம் இருந்து ஏறக்குறைய $600,000 மதிப்புள்ள போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பிடோக், கிளமென்டி, ஹவ்காங், ரிவர் வேலி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சோதனையில், 1,296 கிராம் ஹெராயின், 373 கிராம் ‘ஐஸ்’, 9,650 கிராம் கஞ்சா, 103 எக்ஸ்டஸி மாத்திரைகள் போன்றவை பிடிபட்டன.
முன்னதாக அக்டோபர் 8ஆம் தேதி, ஈசூன் ஸ்திரீட் 51ல் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 14 வயதுச் சிறுவனைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் மற்றொரு 14 வயதுச் சிறுவனும் அவனது 22 வயதுச் சகோதரரும் கேன்பராவில் உள்ள வீட்டில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரிடமும் விசாரணை தொடர்கிறது.