புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் 43 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு ஒன்றின் மேல் முறையீட்டுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ரவீந்திரபட், அரவிந்த்குமார் ஆகியோர் நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பாக வேதனையை வெளிப்படுத்தினர்.
“மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சில வழக்குகள் 65 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. சட்ட செயல்முறை நத்தை வேகத்தில் நகர்ந்தால் மனுதாரர்கள் ஏமாற்றமடையலாம்,” என்றனர் நீதிபதிகள்.
“மனுதாரர்கள் நீதித்துறையின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக விசாரிக்க 11 அம்சங்களை கொண்ட விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
நிலுவை வழக்குகள் குறித்து நீதிமன்றங்கள், வழக்குரைஞர் அமைப்புகள் தீர்வு காணவேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.
ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளின் விரைவான விசாரணையை உறுதி செய்யவும், தீர்ப்பை கண்காணிக்கவும் உயர் நீதிமன்றத்திற்கு 11 வழிகாட்டு நெறிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்குகள் நிலுவையில் உள்ளதை கண்காணிக்கும் குழுக்கள் அமைக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு 5 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்காணிக்கும்.