திருவனந்தபுரம்: இஸ்ரேல், காஸா நகர் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைக் கண்டிக்கும் விதமாக கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள கூத்துபறம்பு தொழிற்பேட்டையில் இயங்கி வரும் மரியன் அப்பரெல்ஸ் எனும் ஆடை தயாரிப்பு நிறுவனம் போர் முடியும் வரை இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடை தயாரிக்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளது.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இஸ்ரேல் ராணுவத்திற்கு சீருடைகளைத் தயாரித்து அனுப்புகிறது மரியன் அப்பரெல்ஸ்.
போருக்கு முன் இஸ்ரேலுக்கு 100,000 சீருடைகளைத் தயாரிக்க நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. அதை நிறைவு செய்துவிட்ட பிறகு போர் நிற்கும் வரை புது ஒப்பந்தம் ஏதும் செய்யப்போவதில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மரியன் அப்பரெல்ஸ் நிறுவனத்தில் 1,500 மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதனை தாமஸ் என்பவர் நடத்திவருகிறார்.
இந்நிறுவனம் இஸ்ரேல், கத்தார், பிலிப்பீன்ஸ், சவூதி அரேபியா, குவைத் ஆகிய நாடுகளுக்கு ராணுவச் சீருடைகளைத் தயாரித்து அனுப்புகிறது.