பெங்களூரு: சிபிஐயின் சொத்துக்குவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
கர்நாடகா துணை முதல்வர் மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வந்த உயர் நீதிமன்ற நீதிபதி கே.நடராஜன், டிகே சிவகுமாரின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் சிபிஐ விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையையும் ரத்து செய்த நீதிபதி, வழக்கில் சிபிஐ மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
இதனிடையே டி.கே. சிவகுமார் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்த கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பெலா எம் திரிவேதி அடங்கிய அமர்வு திங்கட்கிழமை விசாரணை செய்தது.
அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞர் எஸ்.வி. ராஜு, “இந்த வழக்கில், 90 விழுக்காடு விசாரணை முடிந்துவிட்டது. அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட தவறான அறிக்கையின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, விசாரணைக்கு விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தடையை நீக்க மறுத்த உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக நவம்பர் 7ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி டி.கே.சிவகுமாருக்கு கடிதம் அனுப்பியிருந்தது.