இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் உயர்மட்ட தளபதி ரியாஸ் அகமது பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.
ரியாஸ் அகமது என்னும் அபு காசிம், இந்தியாவின் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கமாண்டராக செயல்பட்டவர். இந்தியாவின் ஜம்மு பகுதியில் பிறந்து வளர்ந்த இவன், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பயங்கரவாத செயல்களின் பின்னணியில் தேடப்பட்டு வருபவன்.
ரியாஸ் கடந்த ஜனவரி 1ஆம் தேதி காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள தாங்ரி கிராமத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன். அந்தத் தாக்குதலில் எழுவர் உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர். ரியாஸ் அகமதுவை இந்தியா தீவிரமாகத் தேடி வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் ஆளுகைக்கு உட்பட்ட காஷ்மீரில், ராவல் கோட்டில் உள்ள மசூதி ஒன்றில் பதுங்கியிருந்த இவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளான். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் யார் என்பது தெரியவில்லை.
ரியாஸ் அகமது முரிட்கேயில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா முகாமில் செயல்பட்டான். சமீபத்தில் ராவல் கோட்டில் உள்ள முகாமுக்கு மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டில், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் கமாண்டர் உயர் பொறுப்புகளை வகிப்போர் படுகொலை செய்யப்படுவது இது நான்காவது முறையாகும்
ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் காமாண்டர் ஒருவர் கடந்த மார்ச்சில் ராவல்பிண்டி தாக்குதலில் கொல்லப்பட்டார். பிப்ரவரியில் அல்-பதிர் முஜாஹிதீன் என்ற இயக்கத்தின் கமாண்டரான சயீத் காலித் மற்றும் ஐஸ்ஐஸ் அமைப்பின் கமாண்டராக செயல்பட்டு வந்த அஜஸ் அஹமத் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இவர்கள் கொல்லப்பட்டதன் பின்னணியில், பாகிஸ்தானின் காவல்துறை அல்லது ராணுவம் இருப்பதில்லை. அடையாளம் தெரியாத நபர்களே, இந்தியாவுக்கு சாதகமான இந்த தாக்குதல்களை நடத்துகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிரான தாலிபான் அமைப்பினர் முதல் இந்தியாவின் ரகசிய ஏஜெண்டுகள் வரை பலரது செயல்பாடுகள் இவற்றின் பின்னணியில் சொல்லப்படுகிறது.