நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்குச் செல்லும் சாலை சீரமைக்கப்பட உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு மூன்று நாள்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது தொட்டபெட்டா மலைச்சிகரம்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துசெல்வது வழக்கம்.
இங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை போன்றவற்றைக் கண்டு ரசிக்கலாம்.
இந்த மலைச்சிகரத்திற்கு வார நாள்களில் அன்றாடம் 3,000 பேரும், வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் அன்றாடம் 7,000 பேர் வரையிலும் வந்துசெல்கின்றனர்.
இந்நிலையில், தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்குச் செல்லும் சாலையை வனத்துறை மூலம் சீரமைக்கவிருப்பதாகவும் அதை முன்னிட்டு, வரும் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை என்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் உத்தரவிட்டுள்ளது.