ராய்ப்பூர்: அரசு மருத்துவமனைக் கட்டடத்தில் ஐந்து நாள்களாக மின்சாரம் இல்லாததால் அங்குள்ள மருத்துவர்கள் கைவிளக்குடன் அல்லது கைப்பேசி ஒளிர்விளக்குடன் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்தான் இந்நிலை!
சில நாள்களுக்குமுன் அக்கட்டடத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் அங்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஒரு பேருந்தும் ஒரு சரக்குந்தும் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் மாண்டுபோயினர்; 18 பேர் காயமுற்றனர்.
காயமடைந்தவர்கள் பஸ்தர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு சென்ற பிறகே மின்சாரமின்றி மருத்துவர்கள் திண்டாடி வருவது தெரியவந்தது.
காயமடைந்தோரில் சிலர் உயிருக்குப் போராடி வந்த நிலையில், அவர்கள் பின்னர் வேறு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அத்துடன், அவசர மருத்துவ வண்டி கோரியும் அது விபத்து நிகழ்ந்த இடத்திற்குச் செல்லவில்லை.
அதனையடுத்து, அருகில் வசிக்கும் சித்திரகூட் தொகுதி எம்எல்ஏ ராஜ்மன் பெஞ்சமின் வாகனத்திலும் வட்டாட்சியர் வாகனத்திலும் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்றனர்.
இந்நிகழ்வுகளால், விபத்தில் காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் கடும் சினமுற்றனர். பொறுப்பின்றிச் செயல்படும் அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அப்பகுதியிலுள்ள ஒரே பெரிய மருத்துவமனை அதுதான் என்பதால் சுற்றுவட்டார மக்கள் அனைவரும் அதனையே சார்ந்துள்ளனர்.
இதனிடையே, அம்மருத்துவமனையில் மாற்று ஏற்பாடுகளைச் செய்யுமாறும் விரைந்து செயல்பட்டு மின்விநியோகத்தைச் சீரமைக்குமாறும் மின்வாரிய அதிகாரிகளுக்கு எம்எல்ஏ ராஜ்மன் உத்தரவிட்டுள்ளார்.