சிங்கப்பூர் சுகாதாரப் பராமரிப்புக் குழுமமான சிங்ஹெல்த் தன்னுடைய தொலைதூர மருத்துவச் சேவைகளை பலப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக ஒன்றிணைந்த தொலைதூர சுகாதார மையம் ஒன்றை யூனோஸ் பலதுறை மருந்தகத்தில் அமைக்கிறது.
தொலைதூர சுகாதாரச் சேவைகளில் தொடர்புடைய மருந்தக, நிர்வாக ஊழியர்கள் அங்கு வேலை பார்ப்பார்கள்.
மருத்துவ ஆலோசனைகளுக்கான தனித்தனி கூடங்கள் அங்கு இருக்கும். புதிய தெம்பனிஸ் வடக்கு பலதுறை மருந்தகத்தைச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார். அப்போது அவர் இதனை அறிவித்தார்.
யூனோஸ் பலதுறை மருந்தகத்தில் நாள்பட்ட நோயாளிகளுக்கான தன்னுடைய தொலைத்தொடர்பு சுகாதாரச் சேவையை சிங்ஹெல்த் பலதுறை மருந்தகம் பரிசோதித்துப் பார்க்கத் தொடங்கி இருக்கிறது.
அதைத் தொடர்ந்து இந்தப் புதிய அறிவிப்பு இடம்பெற்று உள்ளது.
தெம்பனிஸ் வடக்கு பலதுறை மருந்தகத்தில் இதர காணொளி மருத்துவ கலந்தாலோசனை சேவைகளை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களும் இருக்கின்றன.
இதனிடையே, பிடோக், மரின் பரேடு பலதுறை மருந்தகங்களில் கிடைக்கக்கூடிய மூத்தோருக்கான தொலைத்தொடர்புச் சுகாதாரச் சேவை சிங்ஹெல்த் குழுமத்தின் அனைத்து பலதுறை மருந்தகங்களுக்கும் நீட்டிக்கப்படும் என்று சிங்ஹெல்த் பலதுறை மருந்தகங்களின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் டேவிட் இங் கூறினார்.