ஹாங்காங்: ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தற்செயலாக உட்கொண்ட மூன்று வயதுச் சிறுமியின் தாயை ஹாங்காங் காவல்துறை தேடி வருகிறது.
ஹாங்காங்கில், கடந்த மூன்று மாதங்களில் குழந்தை ஒன்று, ஆபத்தான போதைப்பொருளைத் தற்செயலாக உட்கொண்டது இது இரண்டாவது முறை.
புதன்கிழமை, சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அச்சிறுமி போதைப் பொருள் உட்கொண்டதாகச் சந்தேகிக்கப்படுவதாகவும் காவல்துறையிடம் பிரின்சஸ் மார்கரெட் மருத்துவமனை புகார் அளித்தது.
சிறுமி சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருவதாகவும் ஹாங்காங் ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த வழக்கு இப்போது குழந்தைக் கொடுமை அல்லது குழந்தைப் புறக்கணிப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
செப்டம்பர் 19ஆம் தேதி, காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவளது தந்தை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்.
ஜூலை மாதம் தன் மனைவி போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் எனச் சந்தேகித்த அவர், காவல்துறையை அணுகாமல் சமூக ஆர்வலரின் உதவியை நாடியதாகக் கூறப்பட்டது.
சமூக ஆர்வலரின் பரிந்துரையின் பேரில் சிறுமிக்கு போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவள் ‘ஐஸ்’ போதைபொருளை உட்கொண்டது கண்டறியப்பட்டது. அதையடுத்து குழந்தை மருத்துவர் காவல்துறையிடம் புகாரளித்தார்.