புதுடெல்லி: திருட்டுத்தனமான ஒளிபரப்பால் இந்தியத் திரையுலகம் ஒவ்வோர் ஆண்டும் ரூ.20,000 கோடி அளவிற்கு இழப்பை எதிர்கொள்வதாக இந்தியத் தகவல், ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இதனால், திருட்டு ஒளிபரப்பைத் தடுக்க இந்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
திருட்டு ஒளிபரப்பு தொடர்பான புகார்களைப் பெற 12 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தாக்குர் தெரிவித்தார்.
புகாரைப் பெற்ற 48 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
“திரைத்துறைக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த உலகிற்கும் திருட்டு ஒளிபரப்பு பேரச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இப்போது, அதுகுறித்து ஒரு புகாரளித்தால் போதும், நடவடிக்கை எடுக்கப்பட்டுவிடும்,” என்றார் அமைச்சர்.
காப்புரிமை பெற்றவர் அல்லது அவரால் நியமிக்கப்படுபவர், அதிகாரிகளிடம் புகாரளித்தால் போதும். யூடியூப், டெலிகிராம், இணையத்தளங்கள் அல்லது மற்ற இணையவழித் தளங்களிலிருந்து திருட்டுப் படங்கள் அகற்றப்பட்டுவிடும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், திருட்டுத்தனமாக ஒளிபரப்புவோர்க்குக் கடும் தண்டனை வழங்கவும் ஒளிபரப்புச் சட்டம் 2023 வழிவகை செய்வதாக அமைச்சர் தாக்குர் கூறினார்.
அத்தகைய குற்றமிழைப்போர்க்கு மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அத்துடன், ரூ.3 லட்சம் முதல் படத் தயாரிப்புச் செலவில் ஐந்து விழுக்காடுவரை அபராதமும் விதிக்கப்படலாம்.