புதுடெல்லி: திரைப்படத் துறையில் கதை, பாடல், இசை, பட அமைப்பு உள்ளிட்ட காப்புரிமைக்கு உட்பட்ட படைப்புகளைத் திருடினால் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை கொடுக்க புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அதற்கான ஒளிப்பதிவு திருத்த மசோதா 2023 மாநிலங்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். இந்தச் சட்டத்தின் நோக்கம், திரைத்துறைக்கு பேரிழப்பை ஏற்படுத்தும் திருட்டைத் தடுப்பதாகும்.
இந்த மசோதா மீது வியாழக்கிழமை 2 மணி நேரம் விவாதம் நடந்தது. அதன் பின்னர் மசோதா நிறைவேற்றபட்டது. ஆனால் அவையில் எதிர்க்கட்சியினர் இல்லாமலேயே இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் காப்புரிமையை மீறுவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது திரைப்படத் தயாரிப்பில் 5 விழுக்காடு அபராதம் விதிக்க இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.