மாற்றம் என்ற ஒன்றுதான் நிரந்தரம் என்பதற்கேற்ப, பல துறைகளிலும் அடியெடுத்துள்ள ஆல்ஹத் ரங்னேகர், 25, தனக்கு விருப்பப்பட்ட தொழில்நுட்பத் துறையில் தம் எதிர்காலத்தை உருவாக்கி வருகிறார்.
தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவில், ‘ஸ்டெப் இட் அப்’ எனும் விரைவுபடுத்தப்பட்ட தொழில்நுட்பம்சார் வாழ்க்கைத்தொழில் மாற்றத் திட்டத்தை ‘டீமஸ்’ நிறுவனம் நடத்திவருகிறது.
இத்திட்டத்தின் இரண்டாம் பருவத்தை (2nd run) சிறப்பாக முடித்தவர்களில் ஆல்ஹத்தும் ஒருவர்.
திட்டம் தொடங்கப்படுமுன் ஆல்ஹத்துக்கு தொழில்நுட்பத் துறையில் அனுபவமே இல்லை. ஆனால், இன்றோ அவர் ‘டீமஸ்’ஸிலேயே இணை மென்பொருள் உருவாக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்.
புதியன இவருக்குப் புதிதல்ல!
மாற்றங்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணம் ஆல்ஹத்தை புதிய துறைக்குத் தயார்ப்படுத்தியது.
மும்பையில் பிறந்த இவர், நான்கு வயதில் சிங்கப்பூருக்கு வந்தார். சிறுவயதில் தம் தாயார் காலமானதாலும், தந்தை வெளிநாட்டில் பணியாற்றியதாலும் அவ்வப்போது தனியாக வாழவேண்டிய சூழலையும் இவர் சமாளித்தார்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ‘பேக்கிங்’, சமையல் அறிவியலைப் படித்தவர், தேசிய சேவை முடித்ததும் பாதுகாப்பான வழியாகக் கருதி, ‘ஆர்எம்ஐடி’ பல்கலைக்கழகத்தில் விநியோகச் சங்கிலி, தளவாடத் துறையில் பட்டப்படிப்பு மேற்கொண்டார்.
தொழில்நுட்பம் சார்ந்த பயணம்
படிப்பின்போது உள்ளகப் பயிற்சிகளை முடித்த ஆல்ஹத், அவற்றில் செய்வதையே செய்யும் சலிப்புதரும் வேலைகள் இருப்பதாகக் கவனித்தார். தொழில்நுட்பம் மூலம் அவற்றை விரைவுபடுத்தலாம் என உணர்ந்தார்.
புதிய தொழில்நுட்பங்களைப் பற்றித் தெரிந்துகொள்வதிலும் நாட்டம் கொண்டிருந்த ஆல்ஹத், தன் பட்டப்படிப்பின் கடைசிப் பருவத்தில் ‘டீமஸ்’ திட்டத்தைப் பல்கலைக்கழகச் செய்திமடலில் கண்டார்.
இத்திட்டத்தில் முறையான பாடங்களோடு தொழில்துறை அனுபவ வாய்ப்பும் அடங்கியிருந்தது அவரை மிகவும் கவர்ந்ததால் அத்திட்டத்திற்கு வெற்றிகரமாக விண்ணப்பித்தார்.
நான்கு மாதங்களில் இத்திட்டத்தில் மென்பொருள் உருவாக்குதலுக்கான சிந்தனை முறைகளையும் ‘எஸ்கியூஎல்’ நிரலாக்கத்தையும், செயலிகளை விரைவாகச் செய்ய உதவும் ‘அவுட்சிஸ்டம்ஸ்’ மென்பொருளையும் ஆல்ஹத் கற்றுத் தேர்ந்தார்.
திட்டத்தின் முடிவில் இவர், ‘டீமஸ்’ஸின் பணியிடச் சூழல் பிடித்துப் போனதால் அங்கேயே தொடரும் வாய்ப்பை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டார்.
சக பணியாளர்களின் உதவியோடும் தானாகவும் ‘ஜாவாஸ்கிரிப்ட்’, சி ஷார்ப் (C#) போன்ற கணினி மொழிகளையும் தன்முனைப்புடன் கற்றுவருகிறார் ஆல்ஹத்.
மூவாண்டுகளில் 400 பேரைத் தொழில்நுட்பத் துறைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் ‘ஸ்டெப் இட் அப்’ திட்டம் 2022ஆம் ஆண்டு சிங்கப்பூரில் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின்கீழ் பதிவுசெய்து பயனடைய https://stepitup.temus.com/ என்ற இணையத்தளத்தை நாடலாம்.