மே தினத்தன்று ‘ஹன்சிகா இஞ்சினியரிங்’ அதன் ஊழியர்களுக்காக தலப்பாக்கட்டி உணவகத்தில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
சைவ, அசைவ உணவுவகைகளை உண்டு மகிழ்ந்தனர் சுமார் 50 வெளிநாட்டு ஊழியர்கள். பாடல்கள் பாடியும் தங்கள் பொழுதைக் கழித்தனர். சிறப்பாகப் பாடியவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
ஹன்சிகா நிர்வாகத்தினரும் தொழிலாளர்களும் இணைந்து மே தினத்துக்காக சிறப்பு கேக் ஒன்றையும் வெட்டினர். அதிர்ஷ்ட குலுக்கில் மின்விசிறி, அரிசி குக்கர் என 10 பரிசுகள் வழங்கப்பட்டன.
“தொழிலாளர்கள் நம் வணிகத்தின் பலம். அவர்களது உழைப்பை அங்கீகரிக்க விரும்பினோம். அவர்கள் தொழிலில் மேன்மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்,” என்றார் ஹன்சிகா நிர்வாக இயக்குநர் மாலதி ராஜபாண்டியன்.
“வழக்கமாக மே தினத்தன்று நாங்கள் எங்கள் தொழிலாளர்களின் தங்குமிடங்களுக்கு உணவு அனுப்புவோம். ஆனால், இவ்வாண்டு புதிதாக அனைவரையும் உணவகத்திற்கு அழைத்து விருந்து படைத்தோம்,” என்றார் இணை நிர்வாக இயக்குநர் ராஜபாண்டியன்.
“ஆண்டு முழுவதும் கடுமையாக உழைக்கும் தொழிலாளர்களுக்கு இன்று நிர்வாகத்தினருடன் சிரித்துப் பேசி மகிழ முடிந்தது,” என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அரவிந்த் குமார், 34.