இணையப் புரட்சியின் அடுத்தகட்டமாக, அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
‘ஓபன் ஏஐ’, தானியங்கி வாகனங்கள் தொடங்கி, அனைத்துக் கேள்விகளுக்கும் விடையளிக்கத் தயாராகியுள்ள கூகலின் ‘ஜெமினி 1.0’, கண்ணில் காணும் காட்சியைப் புகைப்படமெடுக்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் ‘ஸ்மார்ட்’ கண்ணாடி என உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டின் நீட்சியை அலசி ஆராய்கின்றன.
படைப்புத் திறனைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே போகும் செயற்கை நுண்ணறிவு ஏறத்தாழ அனைத்துத் துறைகளிலும் ஏதோ ஒரு வகையில் செயல்பாட்டில் இருக்கிறது.
அடையாளத்தை உறுதிசெய்து திறன்பேசியைப் பயன்படுத்துவது, உணவு, காணொளி உள்ளிட்ட பல்வேறு செயலிகளும் தளங்களும் பயனருக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்பதை ஆராய்ந்து அதற்கேற்ற பரிந்துரைகளை வழங்குவது இந்தத் தொழில்நுட்பம்தான்.
ஏற்கெனவே இருக்கும் தரவுகளைக் கொண்டும் இயந்திரக் கற்றல் மூலம் அறிந்துகொண்டும் தேவைக்கேற்ப புதிதாக ஒன்றை உருவாக்கும் திறன்கொண்ட ‘ஜெனெரேட்டிவ் ஏஐ’ எனும் செயற்கை நுண்ணறிவு, மனிதப் பயன்பாட்டை ஓரங்கட்டி பலரது வேலையைப் பறித்துவிடுமா என்கிற விவாதத்தை முன்வைத்துள்ளது.
“செயற்கை நுண்ணறிவு மிரளவைக்கும் மாற்றங்களை நிகழ்த்தும் என எதிர்பார்க்கலாம். ஆனால், அதனை மனிதர்கள் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்துதான் எதிர்காலத்தைக் கணிக்க முடியும்” என்கிறார் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் மென்பொருள் பொறியாளர் வினோத் குமார்.
மேலும் அவர், “தொழிற்புரட்சி மாற்றத்திற்குப் பின் விவசாயம் இயந்திரமயமாதலைக் கண்டோம். அதேபோல, இவ்வகைத் தொழில்நுட்பப் பயன்பாடுகள், வாடிக்கையாளர் சேவை போன்றவர்களின் வேலையைப் பறிக்க வாய்ப்புண்டு. ஆனால் அதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம். உடனடியாக நடக்கும் என நான் கருதவில்லை,” என்றார்.
மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் ஹேமந்த் முரளி, ஒரே மாதிரியான பணிகளைத் தொடர்ந்து செய்யும் வேலைகளைத் தொழில்நுட்பம் பறிக்கலாம். மறுபுறம், இப்புதிய தொழில்நுட்பத்தைப் பல்வேறு வகையில் பயன்படுத்த வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இது இன்னும் பல புதிய வகை வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்றே கருத்துவதாகச் சொல்கிறார்.
மனிதன் எந்த கண்டுபிடிப்பையும் தனது நலனுக்கேற்றவாறு பயன்படுத்தப் பழகுவது இயற்கை. அதே வகையில் இந்தத் தொழில்நுட்பமும் மனிதனின் ஆளுமைக்குக் கட்டுப்பட்டே இயங்கும் என்பது தமது கருத்து என்கிறார் பொறியாளர் வைத்தீஸ்வரன்.
புதிய தொழில் செய்ய விரும்புவோர், குறைந்த முதலீட்டில் செயல்பாடுகள், சந்தைப்படுத்துதல், மென்பொருள் கட்டுமானம் என அனைத்தையும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேம்படுத்தலாம் எனும் கண்ணோட்டத்தை முன்வைக்கிறார் அவர்.
இவ்வகைத் தொழில்நுட்பம் குறித்த புரிதல் ஆழமாகும்போது வேலைவாய்ப்பு குறித்த பயம் தானாக விலகும் என்கிறார்.
மருத்துவத் துறை, செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியுள்ளது. அவை ஒரு உதவிக் கருவிதானே தவிர, முடிவெடுக்கவோ மாற்றியமைக்கும் சக்தியாகவோ மாற வாய்ப்பில்லை என்கிறார் சுகாதாரத் துறைத் தரவு மேலாண்மை மின்னிலக்கமயமாகும் துறையில் பணியாற்றும் குமரவேலு.
பொறியியல் கல்லூரி மாணவர் அம்பரீஷ், “செயற்கை நுண்ணறிவு வருகையால் வேலை கிடைக்காமல் போய்விடலாம் என்கிற பயம் இல்லை. ஆனால், மனிதர்களைத் தாண்டி, அடுத்து இயந்திரத்தோடும் போட்டிபோடும் நிலை ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன்.
“இயந்திரம் வேலையை எளிதாக்கினாலும், படைப்பாற்றல் என்பது மனிதகுலத்தின் பெரும்பேறு. அதனை வளர்த்துக்கொண்டால் என்றும் வாய்ப்புகளுக்குப் பஞ்சமில்லை,” என்கிறார்.