சிறப்புத் தேவையுடையோர் மேலும் எளிதில் வேலை செய்வதற்குத் தொழில்நுட்பம்வழி ஆதரவு தரும் நோக்கில், இளையர்கள் சிலர் புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்கியுள்ளனர்.
18 முதல் 30 வயது வரையிலான ஆறு இளையர் அணிகளைச் சார்ந்த 30 இளையர்கள், நான்கு மாதங்களாகத் திட்டமிட்டு இவற்றை உருவாக்கியுள்ளனர்.
செப்டம்பர் 30ஆம் தேதி, ‘எஞ்சினியரிங் குட்’ அறநிறுவனத்தின் ஐந்தாவது வருடாந்தர ‘டெக் ஃபார் குட்’ சமூக விழாவில் அவை காட்சிக்கு வைக்கப்பட்டன.
தேசிய இளையர் மன்றம், ‘ஏஎம்டி’, ‘கூகல்’, ‘கேப்லென்’, ‘ஜேம்ஸ் டைசன்’ அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் ஆதரவில் இவ்வாண்டு விழா நடைபெற்றது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தேசிய நூலக வாரிய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நாம் ஒவ்வொருவரும் பங்களிக்கலாம். இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புத்தாக்கத் தீர்வுகள் இதற்கு நல்ல சான்று.
“இவ்வாண்டு நம் சமூக சேவைப் பங்காளிகளைப் பாராட்டும் வேளையில், பொதுச் சேவை, தனியார் துறை, மக்கள் சேவை ஆகியவற்றில் உள்ள அனைத்துப் பங்காளிகளையும் பாராட்டுகிறேன்,” என்றார் திரு சுவா.
விழாவின் கருப்பொருள் ‘அனைவரையும் உள்ளடக்கிய வேலை வாய்ப்புகள்’. இதனையொட்டி, சிறப்புத் தேவைகள் கொண்டோரை வேலைசெய்ய தயார்ப்படுத்தும் நோக்கில், ஆறு சமூகப் பங்காளிகளோடு இணைந்து ஆலோசித்தனர் இளையர்கள்.
தசை வலுவிழப்பு நோயாளிகள் நலச் சங்கம், ‘இன்க்லூஸ்’, ‘செயிண்ட் ஆண்ட்ரூஸ் ஆட்டிசம்’ மையம், ‘மைண்ட்ஸ்’, ‘சிங் மீடியா’, ஆலிஸ்டர் ஆகிய பங்காளிகளுடன் இணைந்து ஆறு சவால்களுக்கு அவர்கள் தீர்வுகண்டனர்.
பங்குபெற்ற ஆறு அணிகளின் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பின்வரும் புகைப்படங்களில் காணலாம். அவற்றைச் சோதிக்க விரும்புவோர் ‘எஞ்சினியரிங் குட்’டைத் தொடர்புகொள்ளலாம். மேல்விவரங்களுக்கு: https://tech4good.engineeringgood.org
பெண்டிமியரில் அமைந்திருக்கும் ‘எஞ்சினியரிங் குட்’ அறநிறுவனம், பழைய மடிக்கணினிகளை நன்கொடையாகப் பெற்று, மறுசுழற்சி செய்து, வசதி குறைந்தோருக்கு வழங்கிவருகிறது. அன்றாடப் பொருள்களை சிறப்புத் தேவையுடையோர், மூத்தோருக்கான கருவிகளாகவும் மறுவடிவமைத்து வழங்குகிறது.