ராஜயோக சக்தி ஆழ்நிலை (ஆர்பிடி) சிங்கப்பூர் தியான இயக்கத்தின் மாணவர் சங்கம் (15 முதல் 25 வயது வரை உள்ளடங்கியோர்) பொதுமக்களிடையே சுற்றுப்புற விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
ஆர்பிடி சிங்கப்பூர் தியான இயக்கத்தின் பதினாறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘நமது சுற்றுச்சூழல், நமது பொறுப்பு’ எனும் கருப்பொருளை ஒட்டி, அக்டோபர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 முதல் 11 வரை ஹோங் லிம் பூங்காவிலும் மாலை 4 முதல் 6 வரை சுங்கை பூலோ சதுப்புநிலப் பாதுகாப்பு வனப்பகுதியிலும் நிகழ்ச்சிகளுக்குச் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
இயற்கையின் முக்கியத்துவத்தைப் பகிர்வதும், மனிதனால் கடலோர பகுதிகளிலும் சதுப்புநிலக் காடுகளில் ஏற்படும் தாக்கங்களை உணர்த்துவதும் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கங்கள்.
இதற்கென உருவாக்கப்பட்ட நடவடிக்கைகள், அனைத்து இனத்தினரும் வயதினரும் தங்கள் நேரத்தை அர்த்தமுள்ள வகையில் செலவிட வழிவகுத்தன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பையொட்டி உறுதிமொழி எடுப்பது, இயற்கைக் காட்சிகளை வரைந்து நூல்களுக்கான பக்க அடையாள அட்டை செய்வது, வண்ணம் தீட்டுவது, புதிர்களுக்குத் தீர்வுகாண்பது, போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் பங்கெடுத்தனர்.
ஆர்பிடி சிங்கப்பூர் மாணவர் சங்க உறுப்பினர்களால் உருவாக்கப்பட்ட எழில்மிகு ஓவியங்களும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டன. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உத்திகளும் இயற்கையைப் பற்றிய தகவல்களும் சுவரொட்டிகள்மூலம் பகிரப்பட்டன.
இறுதியில் நடந்த கேள்வி-பதில் அங்கத்தில், மக்கள் உற்சாகம் கலந்த போட்டித்தன்மையோடு தீவிரமாகப் பங்கேற்றனர்.
“சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நமது தலையாய பொறுப்பாக்கிக்கொள்வது மிக முக்கியம். நடந்தவற்றை மாற்ற முடியாவிட்டாலும், நடக்கவிருப்பதை மாற்றுவது நம் கைகளில்தான் உள்ளது. சிறுதுளி பெருவெள்ளம். இந்நிகழ்ச்சி, ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் சிறு மாற்றங்களை ஏற்படுத்தும் எண்ணத்தை ஒவ்வொருவரின் மனத்திலும் விதைத்தது,” என்று ஆர்பிடி சிங்கப்பூர் மாணவர் சங்க உறுப்பினர்கள் பெருமிதத்துடன் கூறினர்.