கோலாலம்பூர்: சென்ற 2023ஆம் ஆண்டைப் போலவே இவ்வாண்டு தைப்பூசத் திருநாளின்போதும் மலேசியாவின் பத்துமலை முருகன் கோவிலிலும் கல்லுமலை முருகன் கோவிலிலும் பக்தர்கள் பெருவாரியாகத் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாரம் வியாழக்கிழமை (ஜனவரி 25) தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
அத்திருநாளை முன்னிட்டு, கடந்த ஆண்டு பத்துமலை முருகன் கோவிலுக்கு 1.6 மில்லியன் பேர் வருகைபுரிந்தனர். இவ்வாண்டும் அதே அளவில் பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்ப்பதாக கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் ஆர். நடராஜா தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்று அதிகரித்து வந்தாலும், இவ்வாண்டும் பக்தர்கள் கூட்டத்தை எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
“இந்தியாவிலிருந்தும் மற்ற நாடுகளிலிருந்தும் விசாவின்றி வந்து செல்லலாம் என்பதால், இம்முறை தைப்பூசத்திற்கு அதிகமான சுற்றுப்பயணிகள் வருவர் என எதிர்பார்க்கிறோம்,” என்று திரு நடராஜா கூறினார்.
தைப்பூசக் கொண்டாட்டங்கள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதே வேளையில், காய்ச்சல், இருமல் அல்லது சளிக்காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்போர் தைப்பூசக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதிலிருந்து ஒதுங்கி இருக்குமாறு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
இம்முறை 50,000க்கும் மேற்பட்டோர் பால்குடமும் கிட்டத்தட்ட 1,000 பேர் காவடியும் எடுப்பர் என பத்துமலை கோவில் நிர்வாகம் எதிர்பார்க்கிறது.
இதனிடையே, பேராக் மாநிலம், ஈப்போவில் அமைந்துள்ள கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் கோவிலுக்கும் தைப்பூசத்திற்குக் கிட்டத்தட்ட 500,000 பேர் வருகைபுரிவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறை 300க்கும் அதிகமான காவடிகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாக கோவில் நிர்வாகக் குழுத் தலைவர் ஆர். சீதாராமன் கூறியதாக ‘மலாய் மெயில்’ செய்தி தெரிவிக்கிறது.