கியவ்: உக்ரேனின் வேளாண் துறை அமைச்சர் மைக்கோலா சால்ஸ்கியை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சால்ஸ்கி சட்டவிரோதமாக அரசாங்கத்திற்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த நிலத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 7 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது.
சம்பவம் 2017ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்கலாம் என்று நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சால்ஸ்கி 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து உக்ரேனின் வேளாண் துறை அமைச்சராக உள்ளார். தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சால்ஸ்கி மறுத்துள்ளார்.
தற்போது அவர் 1.9 மில்லியன் டாலர் செலுத்தி பிணையில் உள்ளார்.
சால்ஸ்கி வேளாண் துறை அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக வியாழக்கிழமை அறிவித்தார். இருப்பினும் அந்நாட்டு நாடாளுமன்றம் சால்ஸ்கி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை, அதனால் நாடாளுமன்றம் ஒப்புதல் தரும் வரை சால்ஸ்கி அப்பொறுப்பில் இருப்பார்.
சால்ஸ்கி, ஜூன் 24ஆம் தேதி வரை தடுப்புக்காவலில் இருப்பார் என்று நீதிமன்றம் தெரிவித்தது.