நேப்பிடாவ்: மியன்மாரின் முன்னாள் தலைவரும் நோபெல் பரிசு வென்றவருமான திருவாட்டி ஆங் சான் சூச்சி சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்களின் செய்தித்தொடர்பாளர் இத்தகவலை வெளியிட்டார்.
“வெப்பம் கடுமையாக இருப்பதால் இந்த வசதி செய்து தரப்பட்டுள்ளது. திருவாட்டி சூச்சிக்கு மட்டுமல்ல, எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள், குறிப்பாக வயதான கைதிகளைக் கடும் வெப்பத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று மேஜர் ஜெனரல் ஸோ மின் துன் தெரிவித்தார்.
மியன்மார் மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை அந்நாட்டு ராணுவம் 2021ஆம் ஆண்டில் கவிழ்த்தது.
ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து 78 வயது திருவாட்டி சூச்சி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தேசத் துரோகம், ஊழல், தொலைத்தொடர்புச் சட்டத்தை மீறியது போன்ற குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்குகிறார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 27 ஆண்டுகள் சிறை விதிக்கப்பலாம்.
தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திருவாட்டி சூச்சி மறுத்துள்ளார்.