யங்கூன்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள மியன்மார் அரசியல் தலைவர் ஆங் சான் சூச்சியின் வீட்டை ஏலத்தில் வாங்க யாரும் முன்வரவில்லை என்று அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஏலம் மார்ச் 20ஆம் தேதி நடக்க உள்ளதாகவும் வீட்டின் ஆரம்ப ஏல விலை 120 மில்லியன் வெள்ளி என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஏல தினத்தின் போது யாரும் வரவில்லை.
இனே லேக் பகுதியில் உள்ள சூச்சியின் குடும்ப வீடான அது 0.7 ஹெக்டேர் நிலப்பரப்பு கொண்டது.
சூச்சிக்கும் அவரது சகோதரர் ஆங் சான் ஊவுக்கு இடையே வீடு தொடர்பாக பல ஆண்டுகள் பூசல் இருந்தது. வீட்டிற்காக இருவரும் வழக்கும் தொடுத்திருந்தனர். இந்நிலையில் மியன்மார் உச்சநீதிமன்றம் வீட்டை ஏலத்தில் விற்க உத்தரவிட்டது.
2021ஆம் ஆண்டு மியன்மாரில் ஆட்சி கவிழ்ப்பு நடத்தி நாட்டை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது ராணுவம். அதன் பின்னர் சூச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
சூச்சிக்கு 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சிறைபிடிக்கப்பட்டுள்ளார் என்ற விவரங்களை ராணுவம் வெளியிடவில்லை.
சூச்சி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்று அவரது ஆதரவாளர்கள் போராட்டம் செய்தனர்.