லிமா: பெருவைச் சேர்ந்த இரு பெண்களுக்கு அன்பர் தினத்தை முன்னிட்டு பெருத்த ஏமாற்றம்.
இருவரும் போதைப்பொருளைக் கையாள்வதை அறிந்த காவலர்கள், ராட்சத கரடி பொம்மை ஒன்றைத் தூது அனுப்பினர்.
கரடி பொம்மையாகச் சென்ற காவல் அதிகாரி, பெண்களின் வீட்டின் முன்னால் பரிசுப்பொருள்களை ஏந்தியவாறு நின்றார். மற்றோர் அதிகாரி ‘என் சிரிப்புக்குக் காரணம் நீ’ என்ற வாசகத்தைக் காட்டி நின்றார்.
இரு பெண்களில் ஒருவர் இந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு கரடி பொம்மையை நோக்கி ஓடோடி வந்தபோது, அந்தக் கரடி பொம்மை அவரைத் தரையில் தள்ளிக் கைது செய்தது.
வீட்டினுள் அதிர்ச்சியில் இருந்த இரண்டாவது பெண்ணும் கைது செய்யப்பட்டார்.
அவர்கள் இருந்த வீட்டில் நூற்றுக்கணக்கான போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.
“அன்பைக் கொண்டாடும் அதேநேரத்தில் அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமும் காத்திருந்தது,” என்று ஏஎஃப்பி நிறுவனத்திடம் கூறினார் மாறுவேடத்தில் இருந்த அதிகாரி.