உரும்கி: உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை, அடக்குமுறையைக் கட்டவிழ்த்ததாக தன்மீது அனைத்துலக அளவில் உள்ள களங்கத்தைத் துடைத்தொழிக்க சீனாவின் ஸின்ஜியாங் மாநிலம் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
பொருளியலை மேம்படுத்தி, சுற்றுப்பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் அது இறங்கியுள்ளது.
ஸின்ஜியாங்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அரசியல் ஆலோசனை மற்றும் சட்ட அமர்வுக்கான தொடக்க விழாவில் கலந்துகொள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு முதல்முறையாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
விழாவில் கலந்துகொண்ட செய்தியாளர்களில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்களும் அடங்குவர். ஹாங்காங் மற்றும் மக்காவிலிருந்தும் செய்தியாளர்கள் கலந்துகொண்டனர்.
அதுமட்டுமல்லாமல், சீனாவுக்கான ஈரானிய, கஸக்ஸ்தான், கிர்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், பாகிஸ்தான், மங்கோலியா, பெலாருஸ் ஆகிய நாடுகளின் தூதர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஸின்ஜியாங்கின் மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வான இந்த ஆலோசகனை,. சட்ட அமர்வு அண்மையில் நிறைவடைந்தது.
அரசியல் கூட்டங்களைக் காண செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை.
தொடக்க விழாவில் மட்டும் அவர்கள் கலந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த மாற்றத்துக்கு ஸின்ஜியாங் மாநிலத்தின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மா ஸிங்ருய் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஸின்ஜியாங் மாநிலத்தின் பொருளிலை மேம்படுத்த அம்மாநில கட்சித் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினத்தவருக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்ததாகக் குறைகூறப்படும் திரு சென் குவான்குவோவுக்குப் பதிலாக திரு மா மாநிலக் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
திரு சென் 2017ஆம் ஆண்டிலிருந்து 2021ஆம் ஆண்டு வரை ஸின்ஜியாங் மாநிலத்துக்குத் தலைமை தாங்கினார். அப்போது உய்கர் மக்களுக்கு எதிராக அவர் பல கொடுமைகளை இழைத்ததாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன.