வாஷிங்டன்: ஸின்ஜியாங்கில் உள்ள உய்கர் முஸ்லிம்களை சீனா நடத்தும்விதத்தை 'இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்கள்' என்று நேற்று வெளியிடப்பட்ட மனித உரிமை ஆண்டு அறிக்கையில் அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் கடந்த ஜனவரியில் ஸின்ஜியாங் தொடர்பில் கூறியிருந்ததை பைடன் நிர்வாகமும் தற்போது உறுதி செய்துள்ளது.
உலகம் முழுவதும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன.
இவற்றில் சீனாவின் மனித உரிமை மீறல்களும் அடங்கும் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் அரசியல்வாதிகளுக்கு எதிரான தாக்குதல்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெலாரஸ், ஏமன், எத்தியோப்பியா, சிரியா உள்ளிட்ட நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன.
மியன்மாரில் நடந்துள்ள ஆட்சிக் கவிழ்ப்பையும் பிளிங்கன் கண்டித்துள்ளார்.
மியன்மாரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் ஆட்சி திரும்ப வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் மனித உரிமை மீறல் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்க அதிபர் பைடன் கடப்பாடு கொண்டிருப்பதாக செய்தியாளர் கூட்டத்தில் திரு பிளிங்கன் தெரிவித்தார்.