அலாஸ்கா: அலாஸ்காவுக்கு பனி தொடர்பான அனுபவங்கள் பல உண்டு. ஆனால், இவ்வாண்டின் குளிர்காலம் அதற்கு சற்று கடுமையான அனுபவத்தைத் தந்துள்ளது.
அதன் ஆங்கரேஜ் நகரில் இதுவரை 254 செண்டிமீட்டர் அளவில் பனி கொட்டியிருக்கிறது. அங்குள்ள 1,000க்கு மேற்பட்ட வர்த்தகக் கட்டடங்களின் கூரைகள் கடும் பனிப்பொழிவால் இடிந்துவிழும் அபாயத்தில் உள்ளதாக அந்நகரத்தின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சில கட்டடங்களில் சேதங்கள் ஏற்பட்டுவிட்டன. நகர மன்றத்தின் ஊழியர்கள், பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு கட்டடங்களின் கூரைகளில் உள்ள பனியை அகற்றுமாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.
இல்ல உரிமையாளர்கள் தங்கள் வீட்டுக் கூரைகளில் ஏறி அங்குள்ள பனியை மண்வெட்டிகளைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.
குளிர்காலம் இன்னும் நீண்ட நாள்கள் நீடிக்கும் எனும் நிலையில், ஆங்கரேஜின் பனிப்பொழிவு தற்போதைய சாதனையான 342 செண்டிமீட்டர் அளவை மீறிவிடும் என்று கருதப்படுகிறது.
அண்மைய நாள்களின் வெப்பநிலை, இப்பருவத்தின் ஆகக் குறைந்த நிலையை எட்டிவிட்டது, மேலும் அவலநிலையை அதிகமாக்கியுள்ளது.
அலாஸ்காவின் மற்றொரு நகரமான ஜூனாவ்வில், ஜனவரி மாதத்தின் பனிப்பொழிவு சாதனை அளவை எட்டியுள்ளது. கடந்த வார இறுதியில் கொட்டிய பனியின் அளவு மேலும் சில அங்குலங்கள் அதிகமாகியுள்ளது.
கட்டடங்கள் மட்டுமல்லாது, அங்குள்ள துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் பனியில் மூழ்கியுள்ளன.
ஆங்கரேஜில் அடுத்த வாரம் வெப்பநிலை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், பனிப்பொழிவு இன்னும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி கூறுகிறது.