வாஷிங்டன்: அமெரிக்காவில் 40 மில்லியனுக்கு மேற்பட்டோர் வசிக்கும் பகுதிகளுக்கு வானிலை நிலையம், குளிர்கால வானிலை குறித்து ஆலோசனைகளைக் கூறியுள்ளது.
அங்கு பனி, பலத்த காற்று, கடுமையான பனிப்பொழிவு ஆகியவை ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாள்களில் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இப்போதே பில்லிங்ஸ், மோன்டானா போன்ற பகுதிகளில் வெப்பநிலை மைனஸ் 25 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது.
அயோவா வட்டாரத்தில் பனிப்பொழிவுடன் மணிக்கு 45 மைல் வேகத்தில் குளிர்காற்றும் வீசுகிறது. நியூஜெர்சியில் வெள்ளத்தால் பலர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
வளைகுடாக் கரையோரக் குடியிருப்பாளர்கள் கடுமையான உறைபனியை எதிர்கொள்ளத் தயாராகிவருகின்றனர்.
மத்தியமேற்கு வட்டாரம் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு அமெரிக்காவில் வெள்ளத்தால் மக்கள் அவதியுறுகின்றனர். தெற்குப் பகுதியில் வெப்பநிலை தொடர்ந்து குறையும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது. அர்கன்ஸா, லூசியானா போன்ற மாநிலங்களில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குப் பகுதியிலும் பனிப்பொழிவு கடுமையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
கிரேட் லேக்ஸ், ஆரிகன் வட்டாரங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்விநியோகம் இல்லை. 1,200க்கு மேற்பட்ட விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் 4,300க்கு மேற்பட்ட விமானச் சேவைகள் தாமதமானதாகவும் தகவல்கள் கூறுகின்றன.