சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான விசா விலக்கு சீனப் புத்தாண்டு விடுமுறையில் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது.
ஜனவரி 25ஆம் தேதி இதற்கான ஒப்பந்தத்தில் இருதரப்பு அதிகாரிகளும் கையெழுத்திட்டனர்.
இதன்படி சிங்கப்பூர், சீனாவிலிருந்து சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் ஒருவர் மற்றவர் நாட்டுக்குள் நுழைய முடியும். முப்பது நாள்கள் வரை விசா இல்லாமல் தங்க இரு நாடுகளும் அனுமதிக்கும்.
இரு நாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான வருடாந்தர உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சீனாவுக்குச் சென்றபோது இந்த விசா விலக்கு பற்றி முதல்முறையாக அறிவிக்கப்பட்டது. அப்போது ஒத்துழைப்பு, கூட்டுத் திட்டங்கள் பற்றி பேசப்பட்டது.
கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூரர்களுக்கான 15 நாள் விசா இல்லாத கொள்கையை சீனா மீண்டும் ஜூலை 2023ல் அமல்படுத்தியது.
இதையடுத்து, ஜனவரி 25ஆம் தேதி புதிய 30 நாள் விசா இல்லாத் திட்டம் தொடங்கும் தேதியை சீன ஊடகங்கள் அறிவித்தன.
சீனா தற்போது சிங்கப்பூர் உட்பட குறைந்தது 22 நாடுகளுடன் விரிவான, பரஸ்பர விசா விலக்கு ஏற்பாடுகளை செய்துள்ளது.
2019ல் 3.5 மில்லியனுக்கும் மேற்பட்ட சீன சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வருகையளித்தனர். ஆனால், கொவிட்-19க்குப் பிறகு சீனப் பயணிகளின் வருகை முந்தைய நிலையை இன்னும் எட்டவில்லை.
இவ்வாண்டு பிப்ரவரி 10ஆம் தேதி சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.