புதிய சிங்கப்பூர், சீனாவுக்கு இடையிலான விசா இல்லாத அனுமதி ஏற்பாடு சிங்கப்பூரின் நலனுக்கு உகந்த சாதகமான ஒன்று என துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் இருநாட்டு அரசாங்கங்களுக்கு இடையிலான உச்சநிலை ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பெய்ஜிங் நகருக்கு நான்கு நாள் பயணமாக சீனா சென்றார்.
மாநாட்டு முடிவில் பேசிய திரு லாரன்ஸ் வோங், இந்தப் புதிய விசா இல்லாத அனுமதி ஏற்பாடு இருதரப்பு தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பயணிகள், குடும்ப உறவுகள் உள்ள அனைவருக்கும் வசதியான ஒன்று எனத் தெரிவித்தார்.
“இது சிங்கப்பூருக்கு உதவியாக இருப்பதோடு நம் நாட்டு நலன்களுக்கு சாதகமான ஒன்று என நான் நினைக்கிறேன். அதனால்தான், இதை முன்னெடுத்துச் செல்ல நாங்கள் முடிவெடுத்துள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.
திரு வோங்கின் சீனப் பயணத்தின்போது, அவர் சீனத் துணைப் பிரதமருடன் இருதரப்பு ஒத்துழைப்பு கூட்டு மன்றத்தின் இணைத் தலைவராக பொறுப்பேற்றார்.
இந்தப் புதிய ஏற்பாடு அடுத்த ஆண்டு முற்பகுதியில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், சீன பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், சிங்கப்பூருக்கு வருகை புரிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். சிங்கப்பூரர்கள் சீனாவுக்கு விசா இன்றி 15 நாள் பயணம் மேற்கொள்ளலாம்.