பெய்ஜிங்: அமெரிக்கப் போர்க் கப்பலான யுஎஸ்எஸ் ஃபின், ஜனவரி 24ஆம் தேதியன்று சர்ச்சைக்குரிய கடற்பகுதியான தைவான் நீரிணை வழியாகச் சென்றது.
அண்மையில் தைவானிய அதிபர், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்த பிறகு, அமெரிக்கப் போர்க் கப்பல் அவ்வழியாகச் செல்வது இதுவே முதல்முறை.
இதற்கு எதிராக சீனா அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளது.
ஆனால் போர்க் கப்பல் சென்ற கடல்பகுதி எந்த நாட்டுக்கும் சொந்தமானதன்று என அமெரிக்கக் கடற்படை கூறியது.
“தைவான் நீரிணை வழியாக அமெரிக்கப் போர்க் கப்பல் சென்றது, அனைத்து நாடுகளின் தடையற்ற கப்பல் போக்குவரத்தைக் கட்டிக்காக்க அமெரிக்கா கொண்டுள்ள கடப்பாட்டைக் காட்டுகிறது.
“சுதந்திரத்தையும் உரிமைகளையும் விட்டுக்கொடுக்க எந்த ஒரு நாடும் மிரட்டப்படக்கூடாது,” என்று அமெரிக்கக் கடற்படை அறிக்கை வெளியிட்டது.
இதற்கிடையே, தைவான் நீரிணை வழியாகச் சென்ற அமெரிக்கப் போர்க் கப்பலை சீனக் கடற்படை மிக உன்னிப்பாகக் கண்காணித்ததாகவும் அதற்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் சீன ராணுவம் கூறியது.
“அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்குலைக்கும் நோக்குடன், சினத்தைத் தூண்டும் செயல்களில் அமெரிக்கா அண்மைக்காலமாக அடிக்கடி ஈடுபட்டு வருகிறது,” என்று சீன ராணுவம் தெரிவித்தது.