தைப்பே: தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என்றும் அதை பலவந்தமாக ஒரு நாள் இணைத்துக் கொள்ளப்படும் என்றும் கூறி வரும் சீனா, தைவானை அடிக்கடி மிரட்டியும் வருகிறது.
இந்த நிலையில் ஜனவரி 21ஆம் தேதி தைவான் நீரிணையில் ஆறு சீன பலூன்கள் தென்பட்டதாக தைவான் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
ஆறு பலூன்களில் ஒன்று தைவானைத் தாண்டிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஒன்றரை மாதங்களுக்குப் பிறகு தைவானுக்கு அருகே மீண்டும் பலூன் சம்பவம் நடந்துள்ளது.
தைவான், அதிபர் தேர்தலுக்கு முன்பு ஜனவரி 13ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், சீனாவின் அத்துமீறிய நடவடிக்கைகள் விமானப் பாதுகாப்புக்கு மிரட்டலாக இருப்பதாகவும் மனோவியல்ரீதியில் அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு முன்பு 2023 டிசம்பரிலும் இதே போன்று பலூன்கள் தைவானுக்கு அருகே காணப்பட்டன.
கடந்த 2023 பிப்ரவரியில் தனது வான்வெளியில் பறந்த வெண்ணிற பலூன் ஒன்றை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. உளவு பார்ப்பதற்காக சீனா அனுப்பிய பலூனாக இருக்கலாம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது.
இதையடுத்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே சர்ச்சை வெடித்தது.