கோலாலம்பூர்: முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதிடம் அண்மையில் அந்நாட்டுக் காவல்துறை விசாரணை நடத்தியது.
அப்போது காவல்துறை அதிகாரிகள் தம்மை ஒரு குற்றவாளியைப் போல நடத்தியதாக டாக்டர் மகாதீர் குறைகூறினார்.
இதற்கு மலேசியக் காவல்துறையின் தலைமை ஆய்வாளர் ரஸாருதீன் உசேன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்ததாக அவர் கூறினார்.
டாக்டர் மகாதீரைக் குற்றவாளியைப் போல நடத்தவில்லை என்றார் அவர்.
அண்மையில் தமிழ்நாட்டின் தந்தி தொலைக்காட்சிக்கு டாக்டர் மகாதீர் பேட்டி அளித்திருந்தார்.
அப்போது மலேசியா மீது அந்நாட்டு இந்தியர்களுக்கும் சீனர்களுக்கும் முழுமையான விசுவாசம் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
“விசாரணை தொடரும். இது காவல்துறை நடத்தும் விசாரணை. இதை முழுமையாக நடத்தி முடிக்க வேண்டும். இல்லாவிடில், காவல்துறை பாரபட்சத்துடன் நடந்துகொள்வதாகப் பேசப்படும்,” என்று ஜனவரி 24ஆம் தேதியன்று திரு ரஸாருதீன் தெரிவித்தார்.
டாக்டர் மகாதீரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை இன்னும் மூன்று அல்லது நான்கு நாள்களில் தயாராகிவிடும் என்று குறிப்பிட்ட திரு ரஸாருதீன், பின்னர் அது தலைமைச் சட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.
பேட்டியின்போது டாக்டர் மகாதீர் தெரிவித்த கருத்துகளுக்குக் கண்டனம் தெரிவித்து 18 பேர் அவருக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்ததாக அறியப்படுகிறது.