புத்ராஜெயா: முன்னாள் மலேசிய நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீன் மீது குற்றம் சுமத்த தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகம் பச்சைக் கொடி காட்டிவிட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், 84 வயது டயிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது குற்றம் சுமத்துவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆணையத்தின் தலைமை ஆணையர் அஸாம் பாகி தெரிவித்தார்.
டயிம் தொடர்பான வழக்கைக் கடந்த வாரம் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டிருந்ததாக அவர் கூறினார்.
இதுகுறித்து டயிமின் வழக்கறிஞர்களிடம் தெரிவிக்கப்பட்டதாக திரு அஸாம் பாகி தெரிவித்தார்.
“டயிம் மீது குற்றம் சுமத்த தயாராகிக்கொண்டிருந்தபோது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தது,” என்று தி ஸ்டார் நாளிதழிடம் ஜனவரி 24ஆம் தேதியன்று அவர் கூறினார்.
டயிம் மீது சுமத்தப்பட இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.
டயிம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம் குறித்து தெளிவான விளக்கம் இல்லை என்றும் அவருக்கு எத்தகைய உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தெரியவில்லை என்றும் திரு அஸாம் பாகி தெரிவித்தார்.
ஆணையத்தின் அதிகாரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு டயிமின் மருத்துவர்கள் ஒழுங்காக பதிலளிக்கவில்லை என்றார் அவர்.
எது எப்படி இருந்தாலும், டயிம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்றும் அவர் மீது குற்றம் சுமத்தப்படும் என்றும் திரு அஸாம் பாகி கூறினார்.