கோலாலம்பூர்: பல்வேறு சொத்துகள் குறித்து தெரியப்படுத்தத் தவறியதற்காக மலேசியாவின் முன்னாள் நிதி அமைச்சர் டயிம் ஸைனுதீனின் மனைவியான நயிமா அப்துல் காலித், 66, மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கூறப்படும் சொத்துப் பட்டியலில் பல மில்லியன் டாலர் மதிப்பிலான ‘இல்ஹம் டவர்’ கட்டடம் மற்றும் ‘இல்ஹம் பாரு’ நிறுவனங்கள், மெர்சிடிஸ் கார்கள் இரண்டு, கோலாலம்பூர் மற்றும் பினாங்கில் பல்வேறு சொத்துகள் ஆகியவை அடங்கும்.
சத்தியப்பிரமாணத்தின் கீழ் அவர் மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு (எம்ஏசிசி) வெளியிட்ட குறிப்பின் நிபந்தனைகளுக்கு உட்படாத வகையில் வேண்டுமென்றே எழுத்துபூர்வ அறிக்கை ஒன்றை அளித்ததாக நயிமா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து கோலாலம்பூரின் நீதிமன்ற அமர்வில் ஜனவரி 23ஆம் தேதியன்று தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிராகத் தற்காத்து வழக்காட உள்ளதாக நயிமா தெரிவித்தார்.
குற்றம் நிரூபணமானால் ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையையும் 100,000 ரிங்கிட் (S$28,328) வரையிலான அபராதத்தையும் எதிர்நோக்கலாம்.
வியாபாரியாகவும் உள்ள டயிமுக்கு எதிராகத் தொடங்கப்பட்ட விசாரணையில் தங்களின் வாக்குமூலத்தை அளிப்பதற்காக நயிமா அவரின் இரு மகன்களுடன் ஜனவரி 10ஆம் தேதியன்று எம்ஏசிசி தலைமையகத்திற்குச் சென்றிருந்தார்.