வாஷிங்டன்: காஸாவில் பிணை பிடிக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதற்கு ஏதுவாக சண்டையை இரு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க இஸ்ரேல் யோசனை தெரிவித்து உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்த யோசனையை கத்தார் மற்றும் எகிப்திய நடுநிலையாளர்கள் மூலம் ஹமாஸுக்கு அது தெரியப்படுத்தி உள்ளதாக ஏக்ஸியோஸ் என்னும் அமெரிக்க செய்தித் தளம் ஜனவரி 22ஆம் தேதி தெரிவித்தது.
சண்டை நிறுத்த ஒப்பந்தம் பல கட்டங்களை உள்ளடக்கியது என பெயர் குறிப்பிடப்படாத இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த செய்தித்தளம் குறிப்பிட்டது.
தொடக்கமாக, பிணைக்[Ϟ]கைதிகளாக உள்ள பெண்கள், 60 வயதைக் கடந்த ஆண்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் விடுவிக்கப்பட வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் ஒரு பகுதி.
அதனைத் தொடர்ந்து படைவீராங்கனைகள், இளையர்கள், படைவீரர்கள் மற்றும் பிணைக்கைதியாக இருந்து உயிரிழந்தோரின் சடலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது இஸ்ரேலின் ஒப்பந்த யோசனை.
அதேநேரம் இஸ்ரேலிடம் கைதிகளாக உள்ள பாலஸ்[Ϟ]தீனர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும் என அதிகாரிகள் கூறினர். இருப்பினும், அத்தகைய பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை இன்னும் முடிவாகவில்லை என்றனர் அவர்கள்.
இந்த யோசனை போரை நிறுத்துவதற்கான எந்தவித உறுதிமொழியையும் உள்ளடக்கவில்லை.
அதேநேரம், காஸாவின் முக்கிய நகரங்களில் நிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேலிய துருப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் உருக்குலைந்துவிட்ட வடபகுதிக்கு குடியிருப்பாளர்கள் திரும்பிவர படிப்படியாக அனுமதிக்கவும் ஒப்பந்தம் வழிவகுக்கும் என்கின்றனர் அவர்கள்.
அப்பாவி மக்களைக் காப்பாற்ற
அமெரிக்கா வலியுறுத்து
இந்நிலையில், காஸாவின் தென்பகுதி நகரான கான் யூனிஸில் உள்ள அல்-கைர் மருத்துவமனை மீது இஸ்ரேலியப் படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதோடு அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களை படையினர் கைது செய்ததாக காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் அஸ்ரஃப் கூறினார்.
அச்சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமெரிக்கா, மருத்துவமனையில் உள்ள அப்பாவி மக்களையும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் நோயாளிகளையும் இஸ்ரேல் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
கான் யூனிஸ் நகர் மீது வானிலிருந்தும் தரை வழியாகவும் கடலில் இருந்தும் பலமுனை தாக்குதல் நடத்தப்பட்டதாக குடியிருப்பாளர்கள் கூறினர்.