வாஷிங்டன்: சளிக்காய்ச்சல், சுவாசம் தொடர்பான நோய்களின் அதிகரிப்பால் குறைந்தது நான்கு அமெரிக்க மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் முகக்கவசத்தை கட்டாயமாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நியூயார்க், கலிஃபோர்னியா, இல்லியனோய், மேசசூசட்ஸ் ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவமனைகள், நோயாளிகளும் அவர்களுக்கு சேவை வழங்குவோரும் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கி உள்ளன.
இது குறித்து நியூயார்க் நகர சுகாதார ஆணையர் அஷ்வின் வாசன் டபிள்யூஏபிசி தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் ஜனவரி 3ஆம் தேதி முதல் நகரில் உள்ள 11 மருத்துவமனைகள், 30 சுகாதார மையங்கள், ஐந்து நீண்டநாள் பராமரிப்பு சேவை வழங்கும் மையங்கள் ஆகியவற்றில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய டாக்டர் வாசன், 2022ஆம் ஆண்டு ஒமிக்ரோன் நோய் அலை வீசியதைச் சுட்டினார். அப்போதைய பெரும் பிரச்சினையில் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டது மட்டுமல்ல என்றார். அவர்களுடன் பல முதல்நிலை ஊழியர்களுக்கும் கொவிட்-19 நோய்த் தொற்று ஏற்பட்டதும் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்ததாக விளக்கினார் டாக்டர் வாசன்.
அத்துடன், நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையங்களில் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள ஆகக் கடைசி தகவல்களின்படி அமெரிக்கா முழுவதும் டிசம்பர் 17லிருந்து 25வரை ஒரு வாரத்தில் கொவிட்-19 நோய்த் தொற்றுக்காக 29,000 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதோடு அதற்கு முந்திய வாரத்தைவிட 16 விழுக்காடு அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டப்படுகிறது.
அதே காலகட்டத்தில் 14,700 பேர் சளிக்காய்ச்சலுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் நோய்க் கட்டுப்பாடு, தடுப்பு நிலையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொவிட்-19 தொற்று பரவிய காலத்தில் கட்டாய முகக்கவசம் அரசியல், கலாசார விமர்சனங்களை ஏற்படுத்தியது. மருத்துவ ஆலோசனையை புறக்கணித்து அதை அணியத் தவறியோர் அது நோய் பரவுவதை தடுக்கவில்லை என வாதிட்டனர்.
மற்றொருபுறம், முகக்கவசம் அணியாதோர் மீது அதை அணிந்தவர்களிடம் ஆழமான வெறுப்புணர்வு வளர்ந்தது. இவர்கள் முகக்கவசம் அணியாதோர் மற்றவர்களின் சுகாதாரத்திற்கு பங்கம் விளைவிப்பதாக குற்றம் சாட்டினர்.
அமெரிக்காவில், மற்ற பணக்கார நாடுகளைக் காட்டிலும், 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் கொவிட்-19 கொள்ளைநோய்க்கு பலியானதாகக் கூறப்படுகிறது.