ஷங்காய்: இவ்வாண்டிறுதிக்குள் சீனாவுக்கு வந்து செல்லும் அனைத்துலக விமானங்களின் எண்ணிக்கை கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்கு முந்திய காலத்தில் பதிவானதில் 80 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாட்டின் விமானத் துறையை நிர்வகிக்கும் அமைப்பு வியாழக்கிழமையன்று இதனைத் தெரிவித்தது. 2024ஆம் ஆண்டிறுதிக்குள் வாரத்துக்கு 6,000 அனைத்துலக விமானங்கள் சீனா வந்து செல்லும் என்று சீன சிவில் விமான நிர்வாக அமைப்பு (சிஎஎசி) ஆண்டுதோறும் நடத்தும் மாநாட்டில் அறிக்கை ஒன்றில் இந்த விவரங்களை வெளியிட்டது.
தற்போது அந்நாட்டுக்கு 4,600 அனைத்துலக விமானங்கள் வந்து செல்கின்றன. 2023ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த எண்ணிக்கை 500ஆக இருந்தது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தற்போது 63 விமானங்கள் நேரடியாகப் பயணம் மேற்கொள்கின்றன. இவ்வாண்டு அந்த எண்ணிக்கையைக் கணிசமாக அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிஎஎசி தெரிவித்தது.
சீனாவில் இவ்வாண்டு 690 மில்லியன் பயணங்கள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சிஎஎசி சொன்னது. உள்ளூரில் மேற்கொள்ளப்படும் பயணங்கள், அனைத்துலகப் பயணங்கள் ஆகிய இருவகை பயணங்களும் அந்த எண்ணிக்கையில் அடங்கும்.