சிட்னி: ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாநிலங்களில் டிசம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் இடியுடன் கனத்த மழை பெய்தது. அதன் விளைவாக, ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
மாண்டோரில் மாது ஒருவரும் ஒன்பது வயதுச் சிறுமியும் அடங்குவர் என்று குவீன்ஸ்லாந்து காவல்துறை உறுதிப்படுத்தியது. இருவரும் வெள்ளம் சூழ்ந்த மழைநீர் வடிகாலில் அடித்துச் செல்லப்பட்டனர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
கிரீன் தீவுக்கு அருகில் படகு கவிழ்ந்ததில் மூவர் மாண்டனர். மரங்கள் சாய்ந்ததில் இருவர் மாண்டனர்.
ஆறுகள், ஓடைகளின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து கரைகளை உடைக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
புயலைத் தொடர்ந்து சுமார் 90, 000 வீடுகளில் மின்சாரம் தடைபட்டது என்றும் மின்கட்டமைப்புக்குச் சேதம் ஏற்பட்டதால் மின்விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்ப சில நாள்கள் பிடிக்கும் என்றும் டிசம்பர் 27ஆம் தேதி, குவீன்ஸ்லாந்து மாநில அரசுக்குச் சொந்தமான எனர்ஜெக்ஸ் நிறுவனம் தெரிவித்தது.