ஜார்ஜ்டவுன்: பினாங்கின் பட்டர்வொர்த்தில் உள்ள ஜாலான் ராஜா உடாவில் டிசம்பர் 19ஆம் தேதி, 29 வயது நபர், ஒரு பெண்ணை கொன்றுவிட்டு பினாங்கு பாலத்திலிருந்து குதித்ததாகக் கூறப்பட்டது.
மீனவர்களால் காப்பாற்றப்பட்ட அந்த நபர், மாநில குற்றப் புலனாய்வுத் துறை காவலர்களால் கைது செய்யப்பட்டார் என்று வடக்கு செபராங் பேராய் மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையரான முகம்மது அஸ்ரி ஷாஃபி கூறினார்.
இந்த சம்பவம் குறித்து காலை 11.10 மணிக்கு பொதுமக்களிடமிருந்து காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. பாதிக்கப்பட்ட 42 வயதான பெண் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, காலை 11.58 மணிக்கு இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
மேலும், காவல்துறை தடயவியல் குழுவின் ஆரம்ப விசாரணையில், பெண்ணின் கழுத்து மற்றும் அவரது இடது தோள்பட்டையில் வெட்டுக்காயம் இருந்தது என்று முகம்மது அஸ்ரி தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் பல பார்வையாளர்கள் இருந்தார்கள் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பிரேத பரிசோதனை செபரங் ஜெயா மருத்துவமனையில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இக்குற்றம், சட்டத்தின் பிரிவு 302இன் கீழ் கொலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.